மான்சான்டோ (Man Santo) என்ற பன்னாட்டு விதை உற்பத்தி நிறுவனம், பெர்சி ஷ்மெய்சர் என்ற கனடா நாட்டு விவசாயி மீது கடந்த 1998ம் ஆண்டு ஒரு வழக்கு தொடர்ந்தது. அந்த நிறுவனம் காப்புரிமை பெற்றிருந்த ரவுண்டப் ரெடி கனோலா என்ற மரபணு கொண்ட தானியங்களை விவசாயி பெர்சி ஷ்மெய்சர், சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
தாம் விரும்பி அவ்வாறு செய்யவில்லை என்றும், அருகே உள்ள வயலில் நடவு செய்யப்பட்டிருந்த பயிர்களில் இருந்து காற்று மூலமோ, பூச்சிகள் மூலமோ அந்த மரபணு தமது வயலில் ஊடுருவி இருக்கலாம் என்றும் பெர்சி ஷ்மெய்சர் பதில் அளித்தார்.
மேலும் தமது நிலத்தில் அனுமதி பெறாமல், அத்துமீறி ஊடுருவிய மான்சான்டோ நிறுவனம்தான் குற்றவாளி என்றும், தமது நிலத்தில் உள்ள பயிர்கள் மீது மரபணு தாக்குதல் நடத்திய குற்றத்திற்காக அந்த நிறுவனம் தமக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர் பதில் மனு தாக்கல் செய்தார். ஆனால் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
கனடா நாட்டின் நவீன காப்புரிமை சட்டங்களின் அடிப்படையில் மான் சான்டோ நிறுவனத்தின் காப்புரிமையை மீறிய விவசாயி பெர்சி ஷ்மெய்சர், அந்த நிறுவனத்திற்கு பலகோடி டாலர் இழப்பீடு வழங்கவேண்டும் என்று கனடா நாட்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
மான் சான்டோ நிறுவனம், உலகின் பல நாடுகளிலும், அந்த நாட்டு விவசாயிகளுக்கு எதிரான பலநூறு வழக்குகளை தொடுத்து பல நூறு கோடி டாலர்களை அபராதமாக பெற்றுள்ளது.
மான் சான்டோ (Man Santo), பாயர் (Bayer), டு பாண்ட் (Du Pont) போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் இத்தகைய நடவடிக்கைகள் கனடா போன்ற முன்னேறிய நாடுகளோடு முடிந்து விடுவதில்லை. ஆப்பிரிக்கா, இந்தியா போன்ற ஏழை நாடுகளிலும் பரவியுள்ளது.
இந்தியாவில் இயற்கை விவசாயம் மட்டுமே செய்து வரும் விவசாயி ஒருவர், இத்தகைய பிரசினைகள் தம்மை பாதிக்காது என்று அமைதியாக இருந்து விட முடியாது.
கனடா நாட்டு விவசாயி பெர்சி ஷ்மெய்சர்-ஐப்போல நம் நாட்டு இயற்கை விவசாயிகளும் அவர்கள் செய்யாத தவறுக்கு (நிறுவனங்களின் அத்துமீறலுக்கு) தண்டனை அனுபவிக்கும் நிலை உருவாகி வருகிறது.
இந்தியாவின் பிரபல வேளாண்மை விஞ்ஞானி என்று அறியப்படுபவரும், இந்திய அரசின் வேளாண்மை கொள்கை குறித்த முக்கிய ஆலோசகருமான எம். எஸ். சுவாமிநாதன் உட்பட மரபணு மாற்ற தொழில் நுட்பத்தின் ஆதரவாளர்கள் அனைவரும் இந்த விவகாரத்தில் மவுனம் சாதிக்கின்றனர்.
இந்திய சட்டங்கள் அனைத்தும் உலக வங்கியின் கட்டளைக்கேற்ப மாற்றப்படும் இன்றைய சூழலில் நமது விவசாயிகளும் விதைத்திருடர்களாக சித்தரிக்கப்பட்டு சிறையில் அடைக்கப் படுவார்கள். வணிகம் மற்றும் வரிக்கட்டணம் குறித்த பொது ஒப்பந்தமான காட்(GATT)டின் பரிணாம வளர்ச்சியான உலக வர்த்தக நிறுவன(WTO)த்தின் செயல்பாடுகள் இந்தியாவில் தொடர அனுமதிக்கப்பட்டால், இதுபோன்ற செய்திகளை வெகு விரைவில் நாமும் படிக்க நேரிடும்.
WTO எனப்படும் உலக வர்த்தக நிறுவனத்தில் இந்தியா உறுப்பு நாடானதன் தொடர்ச்சியாக அந்த அமைப்பு ஏற்படுத்தும் அனைத்து ஒப்பந்தங்களையும் கட்டாயமாக ஏற்றாக வேண்டிய அவல நிலையில் இந்தியா உள்ளது. இவ்வாறு உலக வர்த்தக நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட அறிவுச் சொத்துரிமை குறித்த TRIPS ஒப்பந்தத்தில் இந்தியா கையொப்பமிட்டதை தொடர்ந்து, அறிவு சொத்துரிமை தொடர்பாக ஏற்கனவே உள்ள சட்டங்களில் பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் பல புதிய சட்டங்களும் இயற்றப்பட்டு வருகின்றன. இதன் விளைவாக இந்தியாவின் விவசாயம், வர்த்தகம், மருத்துவம் உள்ளிட்ட துறைகள் பல்வேறு மாற்றங்களை சந்தித்து வருகிறது. இவற்றில் குறிப்பாக வேளாண்மைத்துறை மற்றும் விவசாயிகளின் வாழ்நிலையில் மாற்றங்களை ஏற்படுத்தும் சட்டங்களைப்பற்றி சுருக்கமாக பார்ப்போம்.
காப்புரிமை சட்டம் (PATENT ACT)
இந்தியாவின் காப்புரிமை சட்ட வரலாறு 1856ம் ஆண்டில் தொடங்குகிறது. இந்தியாவில் அன்றைய ஆட்சியாளர்களான ஆங்கிலேயர்கள் தங்கள் வர்த்தக நலன்களை பாதுகாக்க இந்த சட்டத்தை அறிமுகப்படுத்தினர். இந்த சட்டம் 1859, 1872, 1883 ஆண்டுகளில் பல மாற்றங்களை சந்தித்துள்ளது. இந்த மாற்றங்களை உள்ளடக்கிய ஒரு சட்டம் 1911ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்து சுமார் 22 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதைய காப்புரிமை சட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
ஒரு பொருளையோ, அதன் பயன்பாட்டையோ முதன்முறையாக கண்டறியும் ஒருவர், உரிய அதிகார அமைப்புகளிடம் பதிவு செய்து பெறும் உரிமை, காப்புரிமை எனப்படுகிறது. இவ்வாறு காப்புரிமை பெற்ற அப்பொருளை பதிவு செய்தவர் மட்டுமே தயாரித்து விற்பனை செய்ய முடியும். அவரைத்தவிர வேறு யாரும் அப்பொருளை 20 ஆண்டுகளுக்கு உற்பத்தி செய்வதை இந்த சட்டம் தடை செய்கிறது.
பழைய சட்டத்தின்படி, விவசாயம் மற்றும் மருத்துவத்துறை தொடர்பான கண்டுபிடிப்புகளுக்கு இந்த சட்டத்தின்கீழ் 7 ஆண்டுகள்வரை மட்டுமே காப்புரிமை வழங்கப்பட்டது. மேலும், இந்த சட்டத்தின்கீழ் விவசாயம் மற்றும் மருத்துவத்துறை சார்ந்த புதிய பொருட்களை கண்டுபிடிப்பவர்கள், அப்பொருளை தயாரிக்கும் முறையை (மட்டுமே) PROCESS PATENT என்ற பெயரில் காப்புரிமை பதிவு செய்யலாம்.
இவ்வாறு காப்புரிமை பெற்ற ஒரு பொருளை வேறு ஒருவர், அதே முறையில் தயாரிக்க முடியாது. ஆனால், அதே பொருளை வேறு முறைகளில் தயாரித்து விற்பதையோ, பயன்படுத்துவதையோ யாரும் தடுக்க முடியாது. இந்த முறையின் கீழ் விலை உயர்ந்த வெளிநாட்டு மருந்துப்பொருள் ஒன்றை உள்நாட்டு மருந்து தயாரிப்பாளர்கள் வேறு முறைகளில் தயாரித்து குறைந்த விலையில் விற்பனை செய்யும் வாய்ப்பு முன்னர் இருந்தது.
ஆனால், உலக வர்த்தக நிறுவனத்தின் ஒரு பகுதியான TRIPS ஒப்பந்தத்தில் இந்தியா கையொப்பம் இட்டதைத் தொடர்ந்து தற்போது PROCESS PATENT என்ற பொருள் தயாரிப்பு முறையோடு கூடுதலாக PRODUCT PATENT என்ற பெயரில் பொருளுக்கே காப்புரிமை வழங்கும் முறை அமலுக்கு வந்துள்ளது. இந்த புதிய முறையின் கீழ் காப்புரிமை பதிவு பெற்ற மருந்து அல்லது விதை போன்ற ஒரு பொருளை காப்புரிமை பெறாத மற்றவர்கள் வேறெந்த முறையிலும் தயாரிப்பது தடை செய்யப்படுகிறது. இதனால் மருந்து அல்லது விதைப்பொருட்களுக்கு காப்புரிமை பெற்றவர்களே விலை நிர்ணயம் செய்யும் உரிமை பெறுகின்றனர்.
மேலும், இயற்கையாக தோன்றும் தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கு காப்புரிமை வழங்கத் தேவையில்லை என TRIPS ஒப்பந்தம் கூறுகிறது. ஆனாலும் இயற்கையில் அமையாத/ மனித முயற்சிகளால் மேற்கொள்ளப்படும் உயிரியல் சாராத முறை (NON-BIOLOGICAL) மற்றும், நுண்ணுயி்ர் முறை (MICRO-BIOLOGICAL) மூலம் இயற்கை பண்புகள் மாற்றி அமைக்கப்பட்ட தாவரம் உள்ளிட்ட உயிரினங்களுக்கு காப்புரிமை வழங்கவேண்டும் என்று அந்த ஒப்பந்தம் வலியுறுத்துகிறது.
இதன்படி இந்தியாவும் தனது காப்புரிமை சட்டத்தை மாற்றி அமைத்துள்ளது. உயிரியல் அற்ற முறை (NON-BIOLOGICAL) என்பது மறைமுகமாக GENETICALLY MODIFIED ORGANISM எனப்படும் மரபணு மாற்றப்பயிர்களுக்கு காப்புரிமை வழங்கவே உதவுகிறது. மேலும் TRIPS ஒப்பந்தத்தின்படி காப்புரிமை பதிவு செய்யப்பட்ட பயிர்களை 20 வருட காலத்திற்கு வேறு யாரும் உற்பத்தி செய்யவோ, விற்பனை செய்யவோ இச்சட்டம் தடை விதிக்கிறது. (TRIPS ஒப்பந்தத்திற்கு முன் இது 7 வருடமாக இருந்தது)
இந்தியாவின் காப்புரிமை சட்டத்தின்கீழ் நேரடியாக தாவரம், விதைகள், பயிர்வகைகள், அவை இயற்கையாக விளையும் முறை போன்றவற்றிற்கு காப்புரிமை வழங்குவதில்லை. தாவரத்தின் இயற்கையான போக்கில் அமையாமல், மனித செயல்பாடுகள் மூலம் ஏற்படும் மாற்றங்களை NON-ESSENTIAL BIOLOGICAL PROCESS என்று வகைப்படுத்துகின்றனர். இது போன்ற செய்முறைகளுக்கு காப்புரிமை பெற முடியும். ஆக GMO போன்ற மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு காப்புரிமை பெற உதவுகிறது.
அடுத்தப்படியாக TRIPS ஒப்பந்தம், தாவரங்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறையையும் காப்புரிமை பெறத்தக்கதாக கூறியுள்ளது. இதன்படி நமது காப்புரிமை சட்டத்திலும் 2002ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மாற்றத்தின்படி தாவரங்களுக்கான சிகிச்சை முறைகளுக்கும் காப்புரிமை வழங்கப்படுகிறது. இதன் மூலம் தாவரங்களுக்கு மட்டுமல்ல, அவற்றிற்கான மருந்துகள், அதை பயன்படுத்தும் முறை, உபகரணங்கள், இயந்திரங்கள் ஆகிய அனைத்துக்கும் காப்புரிமை பெற முடியும்.
பசுமைப்புரட்சி என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்ட பல தாவரங்களும் பூச்சிகளை எதிர்கொள்ளும் திறன் அற்றவையாக இருந்தன. எனவே பூச்சிக்கொல்லி மருந்துகள், விவசாயிகளின் கூடுதல் சுமையாக இருந்தன. இதற்கு மாறாக பூச்சிகளை கொல்லும் திறன் பெற்றதாக கூறப்படும் பாக்டீரியம் துரெஞ்ஜெரிஸ் (BACTERIUM THURENGERIUS) என்ற நச்சுப்பொருளை தாவரத்தின் மரபணுவில் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப் பட்டது. Bt என்று பரவலாக அழைக்கப்படும் இந்த முறை பருத்தியில் அறிமுகம் செய்யப்பட்டு தற்போது கத்தரிக்காய், பருத்தி, அரிசி உட்பட பல்வேறு பெயர்களில் இந்த உயிரிதொழில் நுட்பம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. நவீன சட்டங்களின் கீழ் இந்த பயிர்கள் அனைத்தும் காப்புரிமை பதிவு செய்யப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில் இந்தியாவில் மான் சான்டோ, பாயர், மஹிகோ உள்ளிட்ட நிறுவனங்களே இத்தகைய காப்புரிமைகளை பதிவு செய்துள்ளன.
இத்தகைய நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இந்திய விவசாயம் சென்றுவிடாமல் கட்டாய உரிமைப்பதிவு (COMPULSORY LICENSING) முறை பாதுகாக்கும் என்று அரசுத்தரப்பில் கூறப்படுகிறது. இம்முறை மூலமாக, காப்புரிமை பெறப்பட்ட ஒரு பொருள் போதிய அளவில் மக்களுக்கு கிடைக்காமல் இருக்கும்போதோ, அல்லது அதிக விலைக்கு விற்கப்பட்டாலோ – மக்களின் நலன் கருதி – அதே பொருளை உற்பத்தி செய்யும் உரிமை, வேறு எவருக்கேனும் வழங்கப்படும். இதன் மூலமாக ஒரு பொருள் ஒருவரிடமே இருப்பதை கட்டுப்படுத்த முடியும் என்றும், இதனால் இத்தகைய பயிர்கள் தனியார் சிலரின் ஏகபோக கட்டுப்பாட்டில் செல்வதை தடுக்கமுடியும் என்றும் அரசுத்தரப்பில் கூறப்படுகிறது.
ஆனால், காப்புரிமை சட்டத்தின்படி காப்புரிமை பெற்ற ஒரு பொருளை தயாரிக்க விரும்பி COMPULSORY LICENSING பெறும் ஒரு நபர், காப்புரிமை பெற்றவருக்கு இழப்பீடு வழங்க வேண்டும். அந்த இழப்பீட்டுத் தொகையை காப்புரிமை பெற்றவரே நிர்ணயம் செய்வார். எனவே அப்பொருளை தயாரித்து விற்பனை செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்குமோ அத்தொகையையே COMPULSORY LICENSING க்கான இழப்பீடாக கேட்பார்கள் என்பதை உண்மை. எனவே இந்த COMPULSORY LICENSING முறை விவசாயிகளுக்கோ, பொதுமக்களுக்கோ பயன்படாது என்பதே உண்மை.
ஒரு பயிர் வகைக்கான காப்புரிமை பதிவு செய்யப்பட்ட உடனே அந்த பொருளுக்கான COMPULSORY LICENSING வழங்கலாம் என்றிருந்த நிலை TRIPS-க்கு பின் மாறியுள்ளது. இதன்படி காப்புரிமை பதிவு செய்து 3 ஆண்டுகள் கழிந்த பின்னரே COMPULSORY LICENSING வழங்கப்படும். இந்த 3 ஆண்டுக்காலத்தில் காப்புரிமை பெற்ற நிறுவனம் வைத்ததுதான் சட்டம். சொல்வதுதான் விலை. இவற்றை எதிர்த்து யாரும் கேள்வி கேட்க முடியாது.
TRIPS ஒப்பந்தத்தின் கீழ் காப்புரிமை சட்டம் அடைந்துள்ள மாற்றத்தின் பயனாக GMO போன்ற பயிர்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களே அதிக லாபம் பெறமுடியும். இது போன்ற பயி்ர்கள் மலட்டுத்தன்மை மிக்கதாக இருப்பதால் ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் தங்கள் விதைப்பயிர் தேவைக்கு காப்புரிமை பெற்ற நிறுவனங்களையே சார்ந்திருக்கும் அவல நிலை ஏற்படும். மேலும் காப்புரிமை காலகட்டம் முடிந்த பின்னரும் இதுபோன்ற பயிர்கள் பொது உபயோகத்திற்கு மீண்டும் வராமல் தடுப்பதற்கு அந்த காப்புரிமை சட்டத்தின்படியே பல வழிமுறைகள் உள்ளன.
காப்புரிமை பெற்ற ஒரு பொருளை வேறு முறையில் தயாரித்து மலிவு விலையில் அளிக்கும் GENERIC MANUFACTURERS-களுக்கு பழைய காப்புரிமை சட்டம் பாதுகாப்பு அளித்தது. ஆனால் புதிய சட்டதிருத்தங்கள் இந்த விவசாயிகளுக்கு பயிர்வகைகள், உரங்கள், ரசாயன உரங்கள் கிடைப்பதை தடுத்து நிறுத்தக் கூடும்.
இயற்கையில் விளையும் தாவரங்களை, மனித முயற்சி மூலம் குறுக்கீடு செய்து மரபணுவை மாற்றியமைக்கும் தாவரங்கள் அனைத்தும் மனிதர்களுக்கும், விலங்கினங்களுக்கும் நன்மையே செய்யும் என்று எதிர்பார்க்க முடியாது. இவை மனிதனின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டு தீமைகளும் செய்யலாம். மரபணு மாற்றப்பட்ட உணவுகளை உட்கொண்டவர்களுக்கு தோல் நோய்கள், ஆண்மை-பெண்மை குறைபடுதல் உட்பட பல்வேறு நோய்கள் ஏற்படுவதாக செய்திகள் வருகின்றன. இவற்றை வேளாண் வி்ஞ்ஞானிகளும் ஏற்றுக்கொள்கின்றனர்.
எதிர்காலத்தில் இந்த மரபணு மாற்ற பயிர்கள், என்னென்ன தீய விளைவுகளை கொண்டுவரும் என்பதற்கோ, அவற்றை தடுக்க என்ன வழி என்பதற்கோ யாரிடமும் பதில் இல்லை.
இத்தகைய குறைபாடுள்ள உணவுப்பொருட்களை உற்பத்தி செய்பவர்கள் மீது உணவுப்பொருட்கள் கலப்பட தடைச்சட்டம், நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், குற்றவியல் சட்டம், தீங்கியல் சட்டம் உள்ளிட்ட சட்டங்களின் மூலம் வழக்கு தொடரவும், பிரசினைக்கு தீர்வு காணவும் வழி இருந்தது. ஆனால் TRIPS ஒப்பந்தம் இந்திய குடிமக்களுக்கான இந்த உரிமைகளை பெருமளவில் குறைக்கின்றது. TRIPS ஒப்பந்தப்படி இத்தகைய பிரசினைகளை ஏற்படுத்தும் தாவரங்களின் பதிவுகளை ரத்து செய்ய மட்டுமே முடியும். பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு கோர முடியாது.
காப்புரிமை போன்ற அறிவுச்சொத்துரிமை சட்டங்கள் விதைகளை தனிநபரின் உரிமையாக வாழ்நாள் முழுவதும் வைத்திருக்க வழி காட்டுகிறது. குறிப்பிட்ட காலத்திற்கு பின் காப்புரிமை பதிவுபெற்ற எந்த பொருளும், எந்த தடையுமின்றி பொதுமக்கள் உபயோகத்திற்கு வந்துவிட வேண்டும் என்பதை அந்த சட்டத்தின் அடிப்படை விதி. இருப்பினும் புதிதாக திருத்தம் செய்யப்பட்டுள்ள காப்புரிமை சட்டம் சில பின் வழிகளின் மூலம் காப்புரிமை பெற்ற பொருள், ஒரு தனி நபரின் கட்டுப்பாட்டிலேயே தொடர்வதற்கு உதவுகிறது. எந்த ஒரு கண்டுபிடிப்பையும் அதன் தொழில் நுட்பரீதியாக மேம்படுத்தியிருந்தாலோ, அல்லது பொருளாதார முக்கியத்துவம் ஏற்பட்டிருந்தாலோ அந்த கண்டுபிடிப்பிற்கு மீண்டும் காப்புரிமை பெறலாம். எனவே GMO போன்ற மரபணு மாற்றப்பட்ட தாவரப்பொருட்களின் காப்புரிமையை, பன்னாட்டு நிறுவனங்கள் எளிதில் நீடித்துக் கொண்டே போகக்கூடும்.
மரபணு தொழில்நுட்பத்திற்கான அங்கீகரிப்பு குழு
(Genetic Engineering Approval Committee)
மரபணு மாற்றப்பட்ட பயிர்களை கண்காணிக்கவும் அவற்றை முறைப்படுத்தவும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சரவைக்கு கீழ் இயங்கும் ஒரு அமைப்பே, மரபணு தொழில்நுட்பத்திற்கான அங்கீகரிப்பு குழு(GEAC).
இந்தக்குழு, மரபணு மாற்றப்பட்ட பயிர்களை சோதித்து அனுமதி அளித்தபின்பே அவற்றை சந்தையில் விற்க முடியும். சோதனை முறையாக நான்கு ஆண்டுகள் மரபணு மாற்றப்பட்ட பயிர்வகைகள் பயிரிடப்பட்டு அதன் விளைவுகளை ஆராய்ந்து இக்குழு அவற்றுக்கு அனுமதி அளிக்க வேண்டும். இதுபோன்ற சோதனைகளை தனியார் நிலங்களில் மேற்கொள்ளலாம் என்ற நிலை இந்தியாவில் உள்ளது.
ஆனால், அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் பல ஐரோப்பிய யூனியன் நாடுகளில் மரபணு மாற்ற சோதனைகளை சாதாரண விவசாய நிலங்களில் சோதனை அடிப்படையில் பயிரிடுவது தடை செய்யப்பட்டுள்ளது. ஆய்வுப்பணிக்கென ஒதுக்கப்பட்ட நிலங்களில் மட்டுமே இத்தகைய பரிசோதனைகளை நடத்தமுடியும்.
இந்தியாவிலோ, நில உரிமையாளருக்கும், விவசாயிக்குமகூட தெரியாமல் மரபணு மாற்றப்பயிர்கள் சோதனை அடிப்படையில் பயிரிடப்படுகின்றன. அமெரிக்கா போன்ற நாடுகளில் சோதனைக்கூட எலி, முயலை வைத்து நடைபெறும் பரிசோதனைகள், இந்தியாவி்ல் மனிதர்களை வைத்து நடைபெறுகின்றன, அதுவும் அரசின் அனுமதியோடு.
மரபணு மாற்றப்பட்ட பயிர்களை முறைப்படுத்துவதில் ஐரோப்பிய யூனியன் பல கடுமையான சட்டங்களை இயற்றியுள்ளது. பல ஐரோப்பிய நாடுகளில் மரபணு மாற்றப்பட்ட பயிர்களை, அவற்றை தயாரிக்கும் நிறுவனத்தின் நிலங்களிலேயே சோதனை செய்யவேண்டும் என்ற முறை பின்பற்றப்படுகிறது. மேலும், மரபணு மாற்றப்பட்ட உணவு வகைகளை மக்களுக்கு விற்பனை செய்யும்போது மரபணு மாற்றப்பட்டது என்ற முத்திரையை (LABELLING) கட்டாயம் இடவேண்டும் என்று அந்நாட்டு சட்டம் வலியுறுத்துகிறது. இதன்மூலம் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் குறித்த முழுவிபரங்களையும் அறிந்து கொள்ளும் பொதுமக்கள், தங்களுக்குத் தேவையான உணவினை தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமையை ஐரோப்பிய நாடுகள் வழங்கியுள்ளன. இதுபோன்ற உரிமை இந்தியாவில் வழங்கப்பட வில்லை என்பது வேதனைக்குரிய செய்தியாகும்.
மரபணு மாற்றப்பட்ட பயிர்களை உலக வர்த்தக நிறுவனம் ஆதரிப்பதால் இவற்றை தடைசெய்வது உறுப்பு நாடுகளுக்கு இயலாத காரியம். மரபணு மாற்றப்பட்ட உணவினால் மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உணவு வகைகளுக்கு கடந்த 1999ம் ஆண்டு ஐரோப்பிய நாடுகள் தடை விதித்தன. இதை எதிர்த்து அமெரிக்கா, உலக வர்த்தக கழகத்தில் முறையீடு செய்தது. இந்த முறையீட்டை விசாரித்த உலக வர்ததக கழகம், ஐரோப்பாவின் தடை நடவடிக்கைகள் உலக வர்ததக கழக நெறிமுறைகளுக்கு எதிரானது என்று கூறி தடையை நீக்குமாறு உத்தரவிட்டது.
அமெரிக்காவில் உற்பத்தியான மரபணு மாற்றப்பயி்ர்களை தடை செய்ய ஐரோப்பிய நாடுகளாலேயே முடியவில்லை என்றபோது இந்தியா போன்ற ஏழை நாடுகளின் நிலையை சொல்லத் தேவையில்லை.
தாவர வகைகள் பாதுகாப்பு மற்றும் உழவர்களின் உரிமைக்கான சட்டம் (PROTECTION FOR PLANT VARIETIES AND FARMERS RIGHTS ACT) 2001
இச்சட்டத்தின் பெயரிலேயே கூறப்பட்டுள்ளதைப்போல தாவரவகைகளையும், உழவர்களின் உரிமைகளையும் பாதுகாக்க வேண்டும் என்று கூறி இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது. தாவரங்களுக்கு அவற்றின் இயல்பான தன்மையில் காப்புரிமை வழங்க முடியாத சூழ்நிலையில் அந்த தாவரங்களை பதிவு செய்வதற்காக கொண்டுவரப்பட்ட இந்த சட்டம், ஏறக்குறைய காப்புரிமை சட்டத்தின் மறு வடிவமாகவே உள்ளது.
இந்த சட்டத்தின் கீழ் ஒரு தாவரத்தை பதிவு செய்ய, அத்தாவரம் முன்பே தெரிந்த எந்த ஒரு தாவரத்தின் குணாதிசயங்களையும் பெற்றிருக்கக் கூடாது. ஒரே ஒரு மாறுபட்ட குணாதிசயத்தை அந்த தாவரம் பெற்றிருந்தாலும் இந்த சட்டத்தின் கீழ் அந்த தாவரத்தை பதிவு செய்ய முடியும்.
முன்பே தெரிந்த ஒரு பயி்ர் வகையின் மூலக்கூறை அறிவியல் வளர்ச்சியின்மூலம் சிறிது மாற்றம் செய்தாலே அதை இச்சட்டத்தின் கீழ் பதிவு செய்து அந்த தாவரத்தை தனி உடைமை ஆக்கிக்கொள்ளலாம்.
இந்த சட்டத்தின் கீழ் ஒரு தாவரவகையை பதிவு செய்து கொண்டால் 15 ஆண்டுகாலம் அவரே அதற்கு முழு உரிமை பெறுகிறார். அவற்றின் உற்பத்தி, விற்பனை போன்றவை அந்த உரிமையில் அடங்கும்.
காப்புரிமை சட்டம் போலவே இந்த சட்டத்தின் கீழும் COMPULSORY LICENSING முறை உள்ளது. ஆனால் இந்த சட்டம் விதைகளை வணிக நோக்கில் உற்பத்தி செய்யும் BREEDER எனப்படும் உற்பத்தியாளர்களுக்கே அதிக பாதுகாப்பு அளிக்கிறது. காப்புரிமை சட்டத்தைப்போலவே இந்த சட்டத்திலும் தாவரம் பதிவு செய்யப்பட்டு 3 ஆண்டுகளுக்கு பிறகே COMPULSORY LICENSING-ல் பதிவு அனுமதிக்கப்படுகிறது. மேலும் PLANT BREEDER விரும்பினால் இந்த சட்டத்தின் கீழ் கூடுதலாக 12 மாத அவகாசம் பெற்றுக்கொள்ளலாம். காப்புரிமை சட்டத்தில் உள்ளது போலவே COMPULSORY LICENSING பெறுபவர் தாவரத்தை பதிவு செய்தவருக்கு அளி்க்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை காப்புரிமை பெற்றவரே நிர்ணயம் செய்வார்.
விதைச்சட்டம் (SEED ACT) 1966
விதைகளை பதிவு செய்வதற்காக 1966ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட விதைச்சட்டம் TRIPS ஒப்பந்தத்திற்கு பின்பு பல மாற்றங்கள் அடைந்து நாடாளுமன்றத்தின் அனுமதிக்காக SEED BILL 2004 என்ற பெயரில் காத்திருக்கிறது.
புதிதாக மாற்றம் பெற்றுள்ள இந்த விதைச்சட்டம் விவசாயிகளுக்கு எதிரானபல அம்சங்களை கொண்டுள்ளது. இச்சட்டத்தின் கீழ் விதைகளை பதிவு செய்தவர் மட்டுமே அந்த விதைகளை விற்பனை செய்ய முடியும். விவசாயிகளுக்கு இச்சட்டம் விதைகளை பாதுகாக்கவும், மறுபயிர் செய்யவும் அவற்றை விற்கவும் அனுமதி அளித்திருந்தாலும் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்த கட்டுப்பாட்டின்படி விவசாயிகள் தங்கள் விதைகளை வணிகப்பெயரிட்டு விற்க முடியாது. அப்படி விற்கவேண்டும் என்றால் அவர்களும் தங்களுடைய விதைகளை இச்சட்டத்தின் கீழ் பதிவு செய்திருக்கவேண்டும். நாட்டின் பல பகுதிகளிலும் பரிசோதனை அடிப்படையில் பயிரிடப்பட்டு நிரூபிக்கப்பட்ட விதைகளை மட்டுமே இச்சட்டத்தின் கீழ்பதிவு செய்யமுடியும். இந்த நிபந்தனை ஒரு சாதாரண விவசாயிக்கு எந்த விதத்திலும் பயனற்றது என்பதும் மிகப்பெரிய வணிக நிறுவனங்களே இதன்மூலம் பயனடைய முடியும் என்பதையும் விளக்க வேண்டியதில்லை.
மற்ற அறிவுச்சொத்துடைமை சட்டங்களைவிட கொடியதாக விதைச்சட்டம் உள்ளது. ஏனெனில் இச்சட்டத்தின் கீழ் ஒருவர் விதைகளை பதிவு செய்ய அந்த விதையின் மூலக்கரு எங்கிருந்து பெறப்பட்டது என்பதை தெரிவிக்க தேவையில்லை.
இதன்மூலம் நம்முடைய பாரம்பரியமிக்க விதைகள் சில தனியார்களின்உடைமையாக மாறக்கூடும். விவசாயிகளின் பாரம்பரிய விதைகளுக்கு இச்சட்டத்தின் கீழ் வேறு யாரும் பதிவு செய்ய முடியாது என்று கூறப்பட்டிருந்தாலும், ஒரு பயிரின் மூலத்தை தெரிவிக்க தேவையில்லை என்னும் விதியின் மூலம் நம்முடைய பாரம்பரிய விதைகள் பறிபோவதற்கு இச்சட்டம் உதவி செய்கிறது.
மற்ற அறிவுச்சொத்துடைமை சட்டங்களைப்போல விதைச்சட்டம் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே உரிமையை அளிப்பதில்லை. இச்சட்டத்தின் கீழ் பதிவு செய்த ஒருவர் மீண்டும், மீண்டும் பதிவு செய்து கொண்டு விதைகளை நிரந்தரமாக தமது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியும்.
மேலும் இந்த சட்டம், விதை கண்காணிப்பாளருக்கு ஏற்கனவே இருந்ததைவிட அதிகப்படியான அதிகாரங்களை வழங்குகிறது.
தற்போதைய சட்டத்தின்படி விதை கண்காணிப்பாளர் எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி அவர் சந்தேகம் கொள்ளும் எந்த ஒரு இடத்தையும், எந்த நேரத்திலும் சோதனை இடலாம். அங்கு காப்புரிமை மற்றும் விதைச்சட்டங்களின் கீழ் உரிய பதிவு பெறாமல் சேமித்து வைத்துள்ள விதைகளை கைப்பற்றுவதோடு, அவற்றை பாதுகாத்து வைத்துள்ள விவசாயியை கைது செய்யும் அதிகாரமும் படைத்துள்ளார்.
லஞ்சம், ஊழல் இவற்றையே முதன்மைப்பணியாக கொண்டு இயங்கும் இந்திய அதிகார வர்க்கம், பணபலம் படைத்த விதை தயாரிப்பு நிறுவனங்களிடம் சரணடைந்து, விவசாயிகளுக்கு எதிராகவே செயல்படும் என்பதையும் கூறத்தேவையில்லை.
-மு. வெற்றிச்செல்வன்
(vetri@lawyer.com)
Article:
http://makkal-sattam.blogspot.com/2007/07/4-4.html
தலைப்பு செய்திகள்
Blog Archive
-
▼
2007
(73)
-
▼
Jul
(26)
- # வாட்டுது வருமான வரி!
- # பன்னாட்டு நிறுவனங்களிடம் கேள்விக்குறியாகும் இந்த...
- # கிரெடிட் கார்டு - கடன் வசூல் என்ற பெயரில் அராஜகமா?
- # மாறும் சட்டங்களும், விவசாயிகளின் பறிபோகும் உரி...
- # வணிக நிறுவனங்களின் அறிவுச்சொத்துரிமையும்..., கு...
- # கல்வி முறையில் மாற்றம் தேவை!
- # கிராமங்களில் வங்கிச் சேவை எஸ். கோபாலகிருஷ்ணன்
- # நாட்டின் வளர்ச்சியில் நாளேடுகள்!
- திரைப்பட வரலாறு 708 இளையராஜா இசை அமைக்க மறுத்த ப...
- மரணதண்டனை எதிர்ப்பாளர்களை தூக்கில் இட வேண்டும்
- வீரமணி மாமாவின் பெரியார் புரா பாரீர்
- கலாமின் கனவு இந்தியா ஏழைகளுக்கானதா?
- ஒலி, ஒளி, விளம்பரத் தொல்லை க.ப. அறவாணன
- நீரிழிவு நோயாளிக்கு புதிய வகை அரிசி கண்டுபிடிப்பு
- வானில் ஓர் எல்லைப் பிரச்னை! வி. கிருஷ்ணமூர்த்தி
- ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சர்க்கரை வியாதிக்குத் த...
- மதிப்போ மதிப்பு; பங்கு மதிப்பு!! குப்புசாமி செல்ல...
- உயிர் எரிசக்தி மாயை-ஓர் அபாயம்! ஆர்.எஸ்.நாராயணன்
- ரூபாய் மதிப்பின் ஏற்றமும் விளைவுகளும் எஸ். கோபாலக...
- உளவுத் துறையில் ஊடுருவல் டி.புருஷோத்தமன்
- அமெரிக்க-இந்தியருக்கு “விடுதலை உணர்வு விருது’
- அரசியல்வாதிகளும் அரசியல்கட்சிகளும்! கே.ராமமூர்த்தி
- அமெரிக்கர்களின் சேமிப்பு
- மேலாளர்களிடம் மனதில் உள்ளதை கொட்டலாமா?
- அமெரிக்காவில் நல்ல டாக்டர்களை கண்டு பிடிப்பது எப்படி?
- பணக்காரர்கள் திமிர் பிடித்தவர்களா?
-
▼
Jul
(26)
வணக்கம்
இங்கே இணைய தளங்களில் நான் பார்த்ததை, படித்ததை, கேட்டதை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.
...............................
செந்தில் குமார்
Subscribe to:
Post Comments (Atom)