ரசித்தவை

செந்தில்குமார் | www.senthil.co.nr |

“”வருமானமே போதவில்லை, அதற்கு வரி வேறா?” என்ற அங்கலாய்ப்பு மத்தியதர வர்க்கத்திடமிருந்து ஒவ்வொரு ஆண்டும் கேட்டவண்ணம் இருக்கிறது. ஆனால் ஆட்சியாளர்களோ இதையெல்லாம் காதில் வாங்காமல் கருமமே கண்ணாக இருந்து வரி வசூலிப்பைத் தீவிரப்படுத்துகின்றனர்.
மாதச் சம்பளக்காரர்கள், அரசு ஊழியர்களானாலும் தனியார் நிறுவன ஊழியர்களானாலும் அவர்களுடைய அலுவலகத்தாராலேயே பிடிக்கப்பட்டு வரி செலுத்தப்பட்டுவிடுகிறது. அதன் பிறகு அதில் சலுகைக்குரிய இனம் ஏதும் இருந்தால் அதை வருமான வரி செலுத்தியவரே கணக்கு கொடுத்து திரும்பப்பெற வேண்டும். இந்த வருமான வரி விலக்கு வரம்பை உயர்த்துவார்கள் என்று ஆண்டுதோறும் நிதியமைச்சரின் பட்ஜெட்டை ஆவலோடு எதிர்பார்த்து, கடைசியில் இலவுகாத்த கிளியாக ஏமாந்து வேறு போவார்கள் மாதச் சம்பளக்காரர்கள். இவர்கள் மீது நிதியமைச்சருக்குக் கரிசனம் வேண்டும்.
தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் வருமான வரி வசூல் அதிகமாகிக் கொண்டே வருகிறது, கிட்டத்தட்ட 3 மடங்காகிவிட்டது என்று தலைமை வருமானவரி ஆணையர் மகிழ்ச்சி பொங்கத் தெரிவித்துள்ளார்.
அதாவது ஐந்தாண்டுகளுக்கு முன்னால் ரூ.5,336 கோடியாக இருந்த வருமான வரி வசூல் கடந்த ஆண்டு ரூ.17,400 கோடியாக உயர்ந்துவிட்டது. தமிழ் நாட்டில் மட்டும் கடந்த ஆண்டு 3.13 லட்சம் மாதச் சம்பளதாரர்கள் வருமான வரி செலுத்துகிறவர்களாக இருந்து “ரிடர்ன்’ எனப்படும் வருமான வரி தாக்கல் செய்திருக்கிறார்கள்.
உள்நாட்டிலேயே
வியாபாரிகள்,
தரகர்கள்,
சொந்தமாகத் தொழில் செய்யும் டாக்டர்கள்,
என்ஜினீயர்கள்,
வக்கீல்கள்,
ஆடிட்டர்கள்,
விமானம், கப்பல் ஆகியவற்றுக்கான டிராவல் ஏஜெண்டுகள்,
லாரி உரிமையாளர்கள்,
சொந்தத் தொழில் செய்பவர்கள்,
வியாபாரிகள்,
சேவைத்துறையில் இருப்பவர்கள்
என்று பலதரப்பட்டவர்களும் வரி செலுத்துகின்றனர். ஆனால் அவர்களுடைய வருவாய்க்கும், செலுத்தும் வரிக்கும் பெரும் இடைவெளி இருப்பது நமக்கே தெரிகிறது, ஆனால் என்ன காரணத்தாலோ அரசும் அதிகாரிகளும் அவர்களையெல்லாம் விட்டுவிடுகிறார்கள்.
இந் நிலையில் சமீபத்தில் கூடிய வருமானவரித்துறை தலைமை ஆணையர்களின் மாநாட்டில் வரி ஏய்ப்பைக் கண்டுபிடிக்கவும், வரி ஏய்ப்பாளர்களை அடையாளம் காணவும் புதிய உத்திகளை வகுத்திருப்பதாகத் தெரிகிறது. இவை மனப்பூர்வமாக அமல்படுத்தப்பட்டால் வரி வருவாய் பலமடங்கு பெருகும், அரசின் செலவுகளுக்கு அதிக நிதியும் கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
“”ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு அல்லது அடுக்குமனை வாங்குகிறவர்களின் ஆண்டு வருமானம் ரூ.20 லட்சத்துக்கு மேல் இருந்தால், அவர்களுடைய வருமான வரி கணக்கைத் தீவிரமாக ஆராய வேண்டும், வீட்டை ரூ.30 லட்சத்துக்கு மேல் விற்பவர்கள் கணக்கில் காட்டும் மூலதன ஆதாயத் தொகையைச் சரிபார்க்க வேண்டும், சொத்துகளை விற்ற வகையில் ரூ.2.5 லட்சத்துக்கு மேல் நஷ்டம் என்று கணக்கு காட்டினாலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று ஆணையர்கள் மாநாட்டில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
பங்குச்சந்தைத் தரகர்கள், பலசரக்குத் தரகர்கள் ஆகியோரையும் கண்காணிக்கத் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. பங்குச் சந்தையில் 12 மாதங்களுக்குள் மூலதன ஆதாயம் ரூ.25 லட்சம் பெற்றதாக கணக்கு காட்டுகிறவர்களின் வருமான வரி “ரிடர்ன்கள்’ இனி தீவிரமாக ஆராயப்படும்.
விவசாய வருமானத்துக்கு வரி போடுவதில்லை என்ற முடிவை அரசு எடுத்திருந்தாலும், சிலருடைய விவசாயக் கழனிகளிலும், தோட்டங்களிலும் மட்டும் -மழை பெய்தாலும் பெய்யாவிட்டாலும் -”"அமோக மகசூல்” ஆகி, அற்புதமாகப் பணம் கொழிக்கும் “”அபூர்வ பசுமைப் புரட்சி” எப்படி சாத்தியம் என்றும் ஆராய முடிவு செய்திருக்கிறார்கள்.
வருமானத்தைக் கணக்கிடுவது மட்டும் அல்ல, அது முறையாக ஈட்டப்படுகிறதா என்பதையும் வருமானவரித்துறை அறிய வேண்டும். இல்லையென்றால் உரிய துறைகளுக்குத் தெரிவித்து தடுக்க வேண்டும். அப்போதுதான் அதன் கடமை முழுமை பெறும்.
Article:
http://bsubra.wordpress.com/2007/07/26/cheating-the-state-income-tax-black-money-business-folks/

0 comments: