ரசித்தவை

செந்தில்குமார் | www.senthil.co.nr |

பாரத ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் உஷா தோராட் அண்மையில் தெரிவித்துள்ள தகவல் ஒன்று கவனிக்கத்தக்கது. இந்தியாவில் இப்போது மொபைல் தொலைபேசி உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை 9 கோடியே 30 லட்சம். அதேசமயம், அனைத்து வங்கிகளிலிருந்தும் கடன் வசதி பெறுபவர்களின் எண்ணிக்கை மொபைல் தொலைபேசி வைத்திருப்பவர்களைவிட குறைவு என்பதே அது.
இதை சற்று கூர்ந்து கவனிப்போம்: நூறு கோடி மக்கள் வாழும் இந்தியாவில் வெறும் 9 கோடி பேருக்குத்தான் வங்கிக் கடன் கிடைக்கிறது. இதில் பெரும் தொழில், சிறு தொழில் மற்றும் விவசாயக்கடன், வீட்டுக்கடன், வாகனக்கடன், தனிநபர் கடன், கல்விக்கடன் என எல்லா வகை வங்கிக் கடன்களும் அடங்கும்.
மேலும், 2006ஆம் ஆண்டில் வங்கிகளின் கடன் வசதி பெற்றவர்களில் 93 சதவிகிதத்தினர் தலா ரூ. 2 லட்சம் மற்றும் அதற்கும் குறைவான தொகையே கடனாகப் பெற்றுள்ளனர். இது மொத்த வங்கிக் கடன் தொகையில் 18 சதவிகிதமே.
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வங்கிக் கடன் வசதி ரத்தநாளம் போன்றது என்பார்கள். அந்த வகையில் பெரும் நகரங்கள், சிற்றூர்கள் மற்றும் கிராமங்களில் வசிப்பவர்களுக்கு பரவலாக இந்தக் கடனுதவி கிடைக்கிறதா என்றால் இல்லை என்பதே பதில். ஒட்டுமொத்த வங்கிக் கடன் தொகையில் 56 சதவிகிதம் தொகையை மும்பை, தில்லி, சென்னை, கோல்கத்தா, பெங்களூர் மற்றும் ஹைதராபாத் ஆகிய 6 மாநகரங்கள் பெற்று விடுகின்றன. மேலும் கவலையளிக்கும் அம்சம் என்னவெனில், கடந்த 5 ஆண்டுகளில் கிராமங்கள் மற்றும் ஊரகப் பகுதிகளில் வங்கிகள் வழங்கிய கடனுதவி 10.4 சதவிகிதத்திலிருந்து 8.3 சதவிகிதமாக வீழ்ச்சி அடைந்துவிட்டது என்பதுதான்.
இந்தச் சரிவுக்கு என்ன காரணம் என்றால், கிராமங்கள் மற்றும் ஊரகப் பகுதிகளில் 2001 டிசம்பரில் 32,496 வங்கிக் கிளைகள் செயல்பட்டன. ஆனால், 2006 டிசம்பரில் வங்கிக் கிளைகளின் எண்ணிக்கை 30,586 ஆக குறைந்துவிட்டன. அதாவது, கடந்த 5 ஆண்டுகளில் 1910 கிளைகள் மூடப்பட்டுள்ளன. பாரத ரிசர்வ் வங்கி 3 மாதங்களுக்கு ஒருமுறை வெளியிடும் தகவல் அறிக்கை (டிசம்பர் 2006)யில் இந்த விவரங்கள் உள்ளன.
ஒருபக்கம், தேசிய வங்கிகள், பழைய தனியார் வங்கிகள், புதிய தலைமுறை தனியார் வங்கிகள் ஒன்றோடொன்று போட்டிபோட்டுக் கொண்டு பெரும் நகரங்களிலும், வணிக மையங்களிலும் புதிய கிளைகளை அமைக்கின்றன. இன்னும் சொல்லப்போனால், தேசிய வங்கிகள் வெளிநாடுகளில் அன்றாடம் புதிய கிளைகளை அமைப்பதில் ஆர்வம் காட்டுகின்றன. இதுவரை தவிர்த்து வந்த பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் கூட இந்திய வங்கிகள் கிளைகளைத் தொடங்குகின்றன. ஆனால், உள்நாட்டில் கிராமக்கிளைகளை இழுத்து மூடுகின்றன. ஓரிரு பெரிய வங்கிகளில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு விசாரித்ததில் கிடைத்த தகவல் இதுதான்: “”லாபம் ஈட்டாத சிறிய கிளைகளை அருகில் உள்ள பெரிய கிளைகளோடு இணைத்து விட்டோம். நாங்கள் ஒன்றும் கிளைகளை மூடவிடவில்லை.” என்றனர். இதற்கெல்லாம் என்ன காரணம் என்று ஆராயத் தேவையில்லை. வங்கிகளின் லாபநோக்கம்தான் முக்கியக் காரணம்.
1969-ல் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டதை அடுத்து, கிராமங்களில் கிளைகளைத் தொடங்குவதற்கு முழுமூச்சுடன் களம் இறங்கின. அஞ்சல் அலுவலகம், காவல் நிலையம் இல்லாத கிராமங்களில்கூட வங்கிக்கிளைகள் தொடங்கப்பட்டன. கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் அந்த நிலை நீடித்தது. அதன் பின்னரே இதில் சுணக்கம் ஏற்பட்டது மட்டுமல்ல; வணிகரீதியில் லாபம் தராத கிளைகள் மூடப்பட்டன.
கிராமங்களில் வாழும் மக்களிடையே சேமிப்புப் பழக்கத்தை உருவாக்குதல், அவர்களிடம் வைப்புத்தொகைகளைத் திரட்டுதல் மற்றும் அவர்களுக்குப் பயிர்க்கடன், கால்நடைக் கடன் போன்ற விவசாயக் கடன் உதவி வழங்குதல், அளவுக்கு அதிகமான வட்டி வசூலிக்கும் தனியார் வட்டிக் கடைகளிலிருந்து அவர்களைக் காப்பாற்றுதல் ஆகியவையே அந்த காலகட்டத்தில் அரசின் நோக்கமாக இருந்தது.
1991-ல் அறிமுகமான பொருளாதாரச் சீர்திருத்தத்திற்குப்பின்னர், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும் வணிக ரீதியில் செயல்பட்டு லாபம் ஈட்ட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. ஒரு வங்கியின் செயல்திறனுக்கு அடையாளம் அது ஈட்டும் லாபமே என்று கருதப்பட்டது. இப்புதிய சூழலில், கிராமக்கிளைகள் ஒரு சுமையாகக் கருதப்பட்டன.
நல்லவேளையாக, காலம் தாழ்ந்தேனும், மீண்டும் அரசின் எண்ண ஓட்டம் மாறத் தொடங்கியுள்ளது. பாரதப் பிரதமருக்கு பொருளாதார ஆலோசனை வழங்கும் உயர்மட்டக் குழுவின் தலைவரும், ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னருமான சி. ரங்கராஜன் அண்மையில் வெளியிட்டுள்ள யோசனை நம்பிக்கையூட்டுவதாக உள்ளது. கிராமங்களில் மீண்டும் வங்கிக்கிளைகளை பெரிய அளவில் அமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் அவர்.
வங்கிகள் தங்கள் கிளைகளைக் கிராமங்களில் தொடங்குவதை ஊக்குவிக்கும் வகையில், கிராமங்களில் புதிய கிளைகளை அமைக்கும் வங்கிகளுக்கே பெரிய நகரங்களில் கிளைகளை அமைக்க அனுமதி வழங்க வேண்டும் என்ற யோசனையைத் தெரிவித்துள்ளார் ரங்கராஜன். பார்க்கப்போனால், இப்படி ஒரு திட்டம் கடந்த காலங்களில் செயல்படுத்தப்பட்டது. ஆனால், காலப்போக்கில் ரிசர்வ் வங்கியும் அடுத்தடுத்து பொறுப்பேற்ற அரசுகளும் கிராமக்கிளைகளை அமைப்பதில் முனைப்பு காட்டத் தவறிவிட்டன என்பதே உண்மை.
தற்போது, பொருளாதார வளர்ச்சி 9 சதவிகிதத்தைத் தாண்டிவிட்டது குறித்து பெருமிதம் அடைகிறோம். ஆனால், வேளாண்துறை, தொழில்துறை மற்றும் சேவைத்துறை ஆகிய மூன்று துறைகளிலும் பரவலாக, ஒரே சீராக வளர்ச்சி ஏற்படவில்லை. மாறாக, ஒருபக்கம், தொழில் உற்பத்தித் துறையும், இன்னொருபக்கம், தகவல்தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, தொலைக்காட்சி, ஹோட்டல் தொழில், சுற்றுலாத் தொழில் உள்ளிட்ட சேவைத் தொழில்கள் அண்மைக்காலமாக அபரிமித வளர்ச்சி கண்டுள்ளன. இதன் பயனாகவே 9 சதவிகித வளர்ச்சி சாத்தியமாகி உள்ளது. இதில் வேளாண் துறையின் பங்கு குறைவே. எனவேதான், கிராமப்புறங்களில் வளர்ச்சியின் பலன் தென்படவில்லை. வறுமை ஒழிப்பு கைகூடவில்லை. புதிய வேலைவாய்ப்புகள் உருவாகவில்லை.
இதை உணர்ந்துதான், மத்திய அரசு வேளாண் துறையில் ரூ. 25,000 கோடி வேளாண் துறையில் முதலீடு செய்வதற்கு முன்வந்துள்ளது. கிராமப்புற வளர்ச்சிக்கு அரசின் புதிய முதலீடுகள் அவசியம் என்பதில் ஐயமில்லை. ஆனால் அதுமட்டும் போதாது. விவசாயிகளுக்கு உரிய நேரத்தில், சரியான அளவில் விவசாயக் கடன் தங்குதடையின்றி கிடைக்கச் செய்வதும் அவசியம். அதேபோல், கிராம மக்களிடையே சிறுசேமிப்பு பழக்கத்தை உருவாக்குதல், அவர்களது வைப்புத்தொகைகளைத் திரட்டி நியாயமான வட்டி வழங்குதல் போன்ற பணிகளைச் செம்மையாக மேற்கொள்வதற்கு, கிராமங்களில் வங்கிகள் இயங்க வேண்டும்.
கிராமக் கிளைகளில் பணிபுரிய, ஊழியர்களைத் தேர்வு செய்வதிலும் கவனம் தேவை. நகர வாழ்க்கை முறைகளில் ஊறிப்போன ஊழியர்களைக் கட்டாயப்படுத்தி கிராமங்களுக்கு அனுப்பினால், உரிய பலன் கிடைக்காது என்பதைக் கடந்தகால அனுபவம் உணர்த்தியுள்ளது. கிராமச்சூழலில் பணிபுரிய, விருப்ப அடிப்படையில் ஊழியர்களைத் தேர்வு செய்தால், அர்ப்பணிப்பு உணர்வுடன் அவர்கள் பணிபுரிவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
வளர்ச்சியின் பலன் கிராமங்களில் வாழும் மக்களுக்கும் விரைவில் வந்து சேரும் என்பதற்கான அறிகுறியாக புதிய வங்கிக் கிளைகளின் செயல்பாடுகள் அமைய வேண்டும்.
(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது மேலாளர்.)
Article:
http://bsubra.wordpress.com/2007/07/23/s-gopalakrishnan-banking-services-in-rural-areas/

0 comments: