“பத்திரிகைத் துறையில் சிறந்த சேவைபுரிந்தமைக்காக ராம்நாத் கோயங்கா பெயரிலான விருதுகள் வழங்கும் விழாவில் பங்கேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். விருது பெற்றவர்களுக்குப் பாராட்டுகளையும் விழாவில் பங்கேற்கும் உங்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பத்திரிகைகளுக்கு வாய்ப்பூட்டு, பத்திரிகைச் சுதந்திரத்துக்குக் கட்டுப்பாடு, பத்திரிகைகளுக்குத் தணிக்கை என்ற நெருக்கடியான காலகட்டத்தில்கூட பத்திரிகைச் சுதந்திரத்துக்காக அஞ்சாமல் பாடுபட்டவர் ராம்நாத் கோயங்கா. சுதந்திரப் போராட்ட வீரர், தொழில் அதிபர், பத்திரிகைச் சுதந்திரத்துக்காக அயராது பாடுபடுபவர் என்று பன்முகச் சிறப்பு பெற்றவர் ராம்நாத் கோயங்கா.
நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னரும் சுதந்திரம் அடைந்த பிறகும் அவர் வெளியிட்ட பத்திரிகைகள் அனைத்துமே அவருடைய நாட்டுப்பற்றுக்கும், அச்சமின்மைக்கும் சான்றாகத் திகழ்கின்றன. 1932-ல் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் அதிபரானார். பிறகு வெவ்வேறு இந்திய மொழிகளிலும் பத்திரிகைகளைத் தொடங்கினார். அவருடைய சீரிய வழிகாட்டுதலில் எல்லா பத்திரிகைகளும் மக்களால் பேசப்படும் அளவுக்குச் சிறப்பாக வெளிவந்தன.
“”பத்திரிகையாளர்கள் தேச வளர்ச்சியின் பங்குதாரர்கள்” என்ற தலைப்பில் இன்று உங்களுடன் விவாதிக்க விரும்புகிறேன்.
1944-ல் எனக்கு 13 வயது. இரண்டாவது உலகப் போர் நடந்து கொண்டிருந்தது. என்னுடைய அண்ணன் சுதேசமித்திரன், தினமணி ஆகிய நாளிதழ்களுக்கு துணை முகவராக இருந்தார். வேலைக்காக அவர் இலங்கை சென்றதால், ராமேஸ்வரத்தில் இவ்விரு பத்திரிகைகளையும் விநியோகிக்கும் பொறுப்பை நான் ஏற்க நேர்ந்தது. மாணவனாக இருந்த நான், உலகப் போர் குறித்த செய்திகளை ஆர்வமாகப் படித்து வந்தேன். முதலில் தினமணி நாளிதழை வாங்கியதும், ஸ்பிட்ஃபயர் ஃபைட்டர் விமானம், லுஃப்ட்வாஃப் விமானத்துக்கு எதிராக எப்படி சண்டை போட்டது என்பதை ஆர்வமாகப் படிப்பேன். விமானவியலில் எனக்கு ஆர்வத்தை விதைத்ததே தினமணிதான். உலகம் முழுவதுமே மக்களின் ஆர்வத்தைத் தூண்டும் விஷயங்கள் அன்றாடம் ஆயிரம் நடக்கலாம். பத்திரிகையாளர்கள் அவற்றை ஊன்றிக் கவனித்து உரிய வகையில் செய்தியாகத் தர வேண்டும்.
1999-ல் டெல் அவிவ் நகருக்குச் சென்றேன். ஹமாஸ் போராளிகள் லெபனான் எல்லையில் ராணுவத்துக்குக் கடும் சேதத்தை ஏற்படுத்திவிட்டனர் என்று தொலைக்காட்சியில் முக்கிய செய்தியை அடிக்கடி ஒளிபரப்பிக் கொண்டிருந்தனர். அடுத்த நாள் பத்திரிகைகளை வாங்கியபோது, இந்தச் செய்தியை முதல் பக்கத்திலேயே காண முடியவில்லை. ரஷியாவிலிருந்து இஸ்ரேலுக்கு வந்த ஒரு விவசாயி, பாலைவனப் பகுதியில் மூன்று ஆண்டுகளாகத் தங்கி காய்கறி, பழச்சாகுபடியை அமோகமாக மேற்கொண்டு சாதனை படைத்திருப்பது குறித்த செய்திதான் முதல் பக்கத்தில் வெளியாகியிருந்தது. மக்களும் அச்செய்தியைத்தான் ஆர்வமாகப் படித்தார்கள். பத்திரிகைத் துறையின் சிறந்த பங்களிப்பு என்றே அச் செய்தியை நானும் கருதுகிறேன்.
எல்லா பத்திரிகைகளிலும் ஆராய்ச்சிப் பிரிவு இருக்க வேண்டும். செய்திகளைத் தர, ஆய்வுசெய்ய, முக்கியமானவற்றை எடுத்துரைக்க இதைப் பயன்படுத்த வேண்டும். கல்வி நிலையங்களில் உள்ள பத்திரிகையியல் ஆய்வுப்பிரிவுடன் இந்தப் பிரிவு இணைக்கப்பட வேண்டும். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகளை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு அது ஏன், எதனால் ஏற்படுகிறது, அதற்கு நீண்டகால, குறுகியகால தீர்வு என்ன என்று அறிய இது உதவும். மூத்த பத்திரிகையாளர்களும் இளைஞர்களும் இதில் சேர வேண்டும். இதனால் பத்திரிகையின் தரமும் உயரும்.
வெளிநாட்டுப் பத்திரிகைகளில் ஒரு செய்தியை வெளியிடுவதற்கு முன், அதை ஆய்வுப்பிரிவுக்கு அனுப்புகின்றனர். அயல்பணி ஒப்படைப்பு என்ற அவுட்-சோர்சிங் முறை குறித்து அமெரிக்காவில் கடுமையான ஆட்சேபம் எழுந்தபோது, ஆய்வு செய்து செய்தி தர ஒரு பத்திரிகையாளர் அமெரிக்காவிலிருந்து இங்கே வந்தார். அயல்பணி ஒப்படைப்பு நிறுவனங்கள் பயன்படுத்தும் கருவிகள், சாதனங்களில் 90% அமெரிக்கா, ஐரோப்பாவிலிருந்துதான் இறக்குமதி செய்யப்படுகின்றன என்பதை அறிந்து, செய்தியாக அளித்தார். அது அமெரிக்க, ஐரோப்பிய மக்களுக்கு வியப்பை அளித்தது.
இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத்துறை (ஐ.டி.) எப்படி வளர்ந்திருக்கிறது என்று அறிய “டிஸ்கவரி’ சேனலின், தாமஸ் ஃப்ரீட்மேன் இந்தியாவுக்கு வந்து பெங்களூர் போன்ற ஊர்களில் ஒரு மாதத்துக்கும் மேல் தங்கினார். “”தி வேர்ல்ட் ஈஸ் ஃபிளாட்” (உலகம் தட்டையானது) என்ற புத்தகத்தை எழுதினார். இந்தியாவில் மட்டும் அல்ல, உலகெங்கும் இப் புத்தகம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் இந்தியப் பத்திரிகையாளர்களும் இப்படி ஏதாவது ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டு ஆய்வு செய்யலாம்.
பத்திரிகைகள் சமுதாயத்துக்குப் பயன் தரும் வகையில் செயலாற்ற முடியும் என்பதற்கு இரண்டு சமீபத்திய உதாரணங்களைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
மகாராஷ்டிரத்தில் விதர்பா பகுதிக்கு கடந்த மாதம் சென்றேன். அங்கு விவசாயிகளின் பிரச்னை குறித்து விவசாயிகள், அதிகாரிகள், வேளாண்துறை நிபுணர்கள், பத்திரிகையாளர்கள், சமூக சேவகர்கள் ஆகியோருடன் விவாதித்தேன். இதேபோல பத்திரிகைகளின் ஆய்வுக்குழுவும் நேரடியாகவே அந்தந்த இடங்களுக்குச் சென்று செய்தி சேகரித்தால் பிரச்னையை அடையாளம் காணவும், அரசுக்கு தீர்வுக்குண்டான வழிகளைச் சொல்லவும் உதவியாக இருக்கும்.
கடந்த ஜூன் மாதம் 15-ம் தேதி மகாராஷ்டிரத்தின் யவத்மால் மாவட்டத்துக்குச் சென்றேன். பீட்டா காட்டன் என்ற மரபணு மாற்றம் செய்யப்பட்ட புதியவகை பருத்தியைச் சாகுபடி செய்து நஷ்டம் ஏற்பட்டதால் அந்த மாவட்ட விவசாயிகள் மனம் நொந்த நிலையில் இருந்தனர். வறட்சி காரணமாக மகசூல் குறைந்தது; அல்லது சாவியாகிப் போயிருந்தது. தண்ணீர் பற்றாக்குறை இல்லாமல் தொடர்ந்து கிடைத்துவந்தால்தான் பீட்டா காட்டன் விதைகளால் நல்ல மகசூல் கிடைக்கும் என்ற உண்மை அவர்களுக்கு அனுபவம் வாயிலாகத்தான் கிடைத்தது. இதுவே முன்கூட்டி தெரிந்திருந்தால் அவர்களின் நஷ்டத்தைத் தவிர்த்திருக்க முடியும். தரமான விதை, சாகுபடி முறையில் விவசாயிகளுக்கு முறையான பயிற்சி, உரிய நேரத்தில் வங்கிக் கடன், விளைபொருளை உடனே சந்தைப்படுத்த நல்ல வசதி, மழை இல்லாமல் போனால் பாசன நீருக்கு மாற்று ஏற்பாடு ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்திருந்தால் பிரச்னை இந்த அளவுக்கு முற்றியிருக்காது.
அடுத்தது பாசனத் தண்ணீர் பற்றியது. வாய்க்கால்களை வெட்டுவது, மடையை மாற்றுவது ஆகிய வேலைகளை யார் வேண்டுமானாலும் செய்யலாம்; ஆறே இல்லாத இடங்களில் தண்ணீரை எப்படிக் கொண்டுவருவது? மழைக்காலத்தில் எந்தெந்த வழிகளில் எல்லாம் நீரைச் சேமிக்கலாம் என்பதை விவசாயிகளுக்குச் சொல்லித்தந்து உடன் இருந்து அமல் செய்தால் வறட்சி காலத்தில் அது கைகொடுத்து உதவும். இவை மட்டும் அல்லாது மாவட்டத்தில் உள்ள ஜவுளி ஆலைகளும் சாகுபடியாளர்களுக்குச் சாதகமாகச் செயல்பட்டு அவர்களுடைய விளைபொருள்களைக் கொள்முதல் செய்ய வேண்டும். இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக விற்கும் வசதி செய்யப்பட வேண்டும். கந்துவட்டிக்காரர்களிடம் விவசாயிகள் சிக்காமல் இருக்க, எல்லா கிராமங்களுக்கும் வங்கிகளின் சேவை கிடைக்க வேண்டும்.
விவசாயிகள் வேளாண் உற்பத்தித் திறனைப் பெருக்கிக் கொள்ளவும், விளைபொருள்களுக்கு நல்ல விலையைப் பெறவும் ஐ.டி.சி. லிமிடெட் நிறுவனம் பெரிதும் உதவியாக இருந்து வருகிறது.
பஞ்சாபின் கேரி புத்தார் என்ற இடத்தில் விவசாயிகள், தொழில்துறையினர், ஆய்வு நிலையம், கல்விக்கூடம் ஆகியவற்றின் நெருங்கிய ஒத்துழைப்பால் பருத்திவிதையின் உற்பத்தித்திறன் இருமடங்காகப் பெருகியது. விவசாயிகளுக்கு நிவாரணம் தரும் திட்டங்களை யாருக்குத் தர வேண்டும் என்பதை முதலிலேயே தீர்மானித்து குறிப்பிட்ட காலவரம்புக்குள் அளிக்க வேண்டும். இதற்கு நல்ல நிர்வாக அமைப்பும், திட்ட நிறைவேறலுக்கு இன்னின்னார்தான் பொறுப்பு என்ற நிர்வாக நடைமுறையும் அவசியம். விதர்பாவில் பிரச்னை என்ன, தீர்வு என்ன என்பதை பத்திரிகைகளின் ஆய்வுக்குழுக்கள் கண்டுபிடித்து எழுத முடியும்.
போரிலும், உள்நாட்டுக் கலவரங்களிலும் இறப்பவர்களைவிட சாலை விபத்துகளிலும் பிற நெருக்கடிகளிலும் இறப்பவர் எண்ணிக்கை நாட்டில் மிக அதிகமாக இருக்கிறது. ஒரு நாளைக்கு இப்படி இறப்பவர்கள் அல்லது காயம்படுகிறவர்களின் எண்ணிக்கை பத்து லட்சத்தை எட்டும் என்று ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. இந்த 10 லட்சம் பேரைக் காப்பாற்ற ஒருங்கிணைந்த, உதவித் திட்டம் அவசியம். ஆந்திர மாநிலத்தில் அப்படியொரு திட்டம் அற்புதமாகச் செயல்படுத்தப்படுகிறது. நெருக்கடிகால மேலாண்மை-ஆய்வு என்ற அமைப்பு ஹைதராபாதைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது.
சாலை விபத்து, பிரசவ காலத்தில் தாய்க்கும், சேய்க்கும் ஏற்படும் ஆபத்துகள், கிரிமினல் நடவடிக்கைகளால் உயிர்களுக்கு ஏற்படும் ஆபத்து, வீடுகளில், தொழிற்சாலைகளில், அலுவலகங்களில் ஏற்படும் தீ விபத்து, மின்சார விபத்து, ரசாயன விபத்து, நில நடுக்கம், ஆழிப் பேரலை, மிருகங்களால் விபத்து என்று எதுவாக இருந்தாலும் தகவல் கிடைத்த 30 நிமிஷங்களுக்குள் அந்தப் பகுதிக்கு முதலுதவி ஆம்புலன்ஸ்களுடன் சென்று சம்பந்தப்பட்டவர்களைக் காப்பாற்றி, உயர் சிகிச்சைக்குத் தாமதம் இன்றி, அமைப்பின் தகவல் தொடர்பு-வாகன வசதிகளைப் பயன்படுத்தி கொண்டுபோய்ச் சேர்ப்பதுதான் இந்த முறை. இதற்கு முதல்படியே, நெருக்கடி காலத்தில் 108 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு என்ன நெருக்கடி, எந்த இடம் என்ற தகவலைச்சுருக்கமாக, தெளிவாகச் சொன்னால் போதும், மற்றவற்றை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.
இந்த அமைப்பு ஏற்பட்ட பிறகு ஆந்திரத்தின் 23 மாவட்டங்களில் 380 ஆம்புலன்ஸ்கள் அவசர உதவி, மீட்புப் பணிகளில் உதவி வருகின்றன. இதுவரையில் 11,500 பேரின் உயிர் உரிய நேரத்தில் உதவிகள் அளித்து காப்பாற்றப்பட்டுள்ளது. இந்த சேவை 24 மணி நேரமும் வாரம் முழுவதும் கிடைப்பது இதன் தனிச்சிறப்பு. இச் சேவையைப் பிற மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் விரிவுபடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இதில் அரசும், தனியார் நிறுவனங்களும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இணைந்து செயல்பட வேண்டும். பத்திரிகையாளர்கள் இதில் முக்கியத் தொடர்பாளர்களாக இருந்து சேவை புரியலாம்.
பத்திரிகை என்பது வாசகர்களுக்குத் தகவல்களையும் கல்வியையும் அளிப்பது. பத்திரிகைகள் நன்கு செயல்பட்டால் தேசம் வலுவடையும். பரபரப்பு செய்திக்கு பத்திரிகைகள் முக்கியத்துவம் தரக்கூடாது. துணிச்சலாக, உண்மையாக, உத்வேகம் ஊட்டுகிற வகையில் செய்திகளைத் தருவதுதான் உண்மையான பத்திரிகையியலாகும். அது தேசத்தின் பொருளாதார, அரசியல் வளர்ச்சிக்கு உதவும். பத்திரிகைகளால் இளைஞர்களின் மனத்தை மாற்ற முடியும் என்பதால், ஆக்கபூர்வமாகச் செயல்படுவது மிகமிக அவசியம்.
100 கோடி இந்தியர்களின் தேவையைக் கருத்தில்கொண்டு, பத்திரிகையியலுக்கான ராம்நாத் கோயங்கா விருதில் மேலும் 2 பிரிவுகளையும் தொடங்க வேண்டும். 1. ஊரக வளர்ச்சிக்கு உதவும் வகையில் செய்தி தருவதற்கும், 2. பஞ்சாயத்து ராஜ் அமைப்பை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டதற்கும் என்று 2 விருதுகளை 2007-08 முதல் வழங்க வேண்டும்.
(ராம்நாத் கோயங்கா பெயரிலான பத்திரிகையியல் விருதுகளை வழங்கி தில்லியில் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் திங்கள்கிழமை ஆற்றிய உரையின் சுருக்கம்)
http://bsubra.wordpress.com/
தலைப்பு செய்திகள்
Blog Archive
-
▼
2007
(73)
-
▼
Jul
(26)
- # வாட்டுது வருமான வரி!
- # பன்னாட்டு நிறுவனங்களிடம் கேள்விக்குறியாகும் இந்த...
- # கிரெடிட் கார்டு - கடன் வசூல் என்ற பெயரில் அராஜகமா?
- # மாறும் சட்டங்களும், விவசாயிகளின் பறிபோகும் உரி...
- # வணிக நிறுவனங்களின் அறிவுச்சொத்துரிமையும்..., கு...
- # கல்வி முறையில் மாற்றம் தேவை!
- # கிராமங்களில் வங்கிச் சேவை எஸ். கோபாலகிருஷ்ணன்
- # நாட்டின் வளர்ச்சியில் நாளேடுகள்!
- திரைப்பட வரலாறு 708 இளையராஜா இசை அமைக்க மறுத்த ப...
- மரணதண்டனை எதிர்ப்பாளர்களை தூக்கில் இட வேண்டும்
- வீரமணி மாமாவின் பெரியார் புரா பாரீர்
- கலாமின் கனவு இந்தியா ஏழைகளுக்கானதா?
- ஒலி, ஒளி, விளம்பரத் தொல்லை க.ப. அறவாணன
- நீரிழிவு நோயாளிக்கு புதிய வகை அரிசி கண்டுபிடிப்பு
- வானில் ஓர் எல்லைப் பிரச்னை! வி. கிருஷ்ணமூர்த்தி
- ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சர்க்கரை வியாதிக்குத் த...
- மதிப்போ மதிப்பு; பங்கு மதிப்பு!! குப்புசாமி செல்ல...
- உயிர் எரிசக்தி மாயை-ஓர் அபாயம்! ஆர்.எஸ்.நாராயணன்
- ரூபாய் மதிப்பின் ஏற்றமும் விளைவுகளும் எஸ். கோபாலக...
- உளவுத் துறையில் ஊடுருவல் டி.புருஷோத்தமன்
- அமெரிக்க-இந்தியருக்கு “விடுதலை உணர்வு விருது’
- அரசியல்வாதிகளும் அரசியல்கட்சிகளும்! கே.ராமமூர்த்தி
- அமெரிக்கர்களின் சேமிப்பு
- மேலாளர்களிடம் மனதில் உள்ளதை கொட்டலாமா?
- அமெரிக்காவில் நல்ல டாக்டர்களை கண்டு பிடிப்பது எப்படி?
- பணக்காரர்கள் திமிர் பிடித்தவர்களா?
-
▼
Jul
(26)
வணக்கம்
இங்கே இணைய தளங்களில் நான் பார்த்ததை, படித்ததை, கேட்டதை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.
...............................
செந்தில் குமார்
Subscribe to:
Post Comments (Atom)