ரசித்தவை

செந்தில்குமார் | www.senthil.co.nr |

நிலவியல் குறியீடூகளுக்கான சட்டம் (GEOGRAPHICAL INDICATION ACT) 1999

திருநெல்வேலி அல்வா, காஞ்சிபுரம் பட்டு, டார்ஜிலிங் தேயிலை, சேலம் மாம்பழம் போன்ற பொருட்கள் அவை தயாராகும் இடத்தின் காரணமாகவே புகழ்பெற்றவை. இவற்றிற்கான குறியீட்டு உரிமையை பதிவு செய்வதற்காக இந்த சட்டம் உருவாக்கப்பட்டது. இதன்மூலம் நமது பாரம்பரிய செல்வங்களான வேப்பமரம், மஞ்சள், பாசுமதி அரிசி போன்றவற்றை பாதுகாத்திட முடியும் என்றும், நம் விவசாயிகளின் உரிமைகளை இச்சட்டம் பாதுகாக்கும் என்றும் கூறப்பட்டது. ஆனால் உன்மையில் ஏராளமான இயற்கை வளம் மிகுந்த நாட்டில் அத்தனை பொருட்களையும் இந்த சட்டத்தின் கீழ் பதிவு செய்வது நடைமுறையில் சாத்தியமில்லை. இந்த சட்டத்தின் கீழ் ஒரு குறிப்பிட்ட பகுதியில் விளையும் அல்லது தயாரிக்கப்படும் பொருளுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு, அப்பகுதி சார்ந்த மக்களுக்கான சிறப்புரிமையாக வழங்கப்படவில்லை. ஒரு புகழ்பெற்ற பொருளை அப்பகுதியில் தயாரிக்கும் யாரும் அதற்கான உரிமையை பதிவு செய் முடியும்.

உதாரணமாக, அமெரிக்க நிறுவனம் ஒன்று காஞ்சிபுரத்தில் தறி அமைத்து காஞ்சிப்பட்டுக்கோ, ஈரோட்டில் உற்பத்தி நிலையம் அமைத்து பவானி ஜமக்காளத்திற்கோ, திருநெல்வேலியில் உணவகம் அமைத்து திருநெல்வேலி அல்வாவிற்கோ இந்த சட்டத்தின் கீழ் பதிவு பெறமுடியும். இந்தியாவின் பாசுமதி அரிசியை பல வெளிநாட்டு நிறுவனங்கள் “டாசுமதி, காசுமதி” போன்ற பெயர்களில் காப்புரிமை பெற்றுள்ளனர். இத்தகைய மோசடிகளுக்கு எதிராக இந்த சட்டத்தில் எந்த பாதுகாப்பும் இல்லை.





உயிரினவகை வேறுபாட்டு சட்டம் (BIOLOGICAL DIVERSITY ACT) 2001

நம் நாட்டின் இயற்கை வளங்களையும் மூதாதையர்களின் அறிவுச்செல்வங்களை (TRADITIONAL KNOWLEDGE) பாதுகாத்திடவும், பல்உயிரின ஒப்பந்தத்தின் (CONVENTION FOR BIO-DIVERSITY) அடிப்படையில் அமைந்ததே உயிரினவகை வேறுபாட்டு சட்டம்.
காப்புரிமை போன்ற சட்டங்களினால் நம்நாட்டு வளங்கள் பறிபோவதை தடுப்பதற்கு இச்சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டம் தேசிய அளவிலும் மாநில அளவிலும் சில கமிட்டிகளை நியமித்துள்ளது. இந்த கமிட்டிகளுக்கு நம் நாட்டினுடைய இயற்கை வளங்களையும் இன்னும் பல வளங்களையும் பாதுகாக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் நம்நாட்டு இயற்கைவளங்களுக்கு அறிவுசார் சொத்துரிமை வழங்குவதை முழுவதுமாக தடைசெய்கிறது.

அதே நேரத்தில் (உள்நாட்டு/வெளிநாட்டு) ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆராய்ச்சிக்காக இந்த கமிட்டியின் கீழ் பாதுக்காக்கப்படும் இடங்களுக்குச்சென்று அவர்களுடைய அனுமதியோடு ஆராய்ச்சி செய்யும் உரிமையையும் இச்சட்டம் வழங்குகிறது. இந்த சலுகை, ஆராய்ச்சி என்ற பெயரில் நம்முடைய இயற்கை வளங்கள் கொள்ளை போவதற்கு உதவக்கூடும். இந்த சட்டம் நம்முடைய இயற்கைவளங்களின் மாதிரிகளை ஆராய்ச்சிக்காக வெளிநாடுகளுக்கு எடுத்துச்செல்வதை தடை செய்யவில்லை. நம் விவசாயிகளின் பழமை வாய்ந்த பயிர்வகைகளையும் வேறுசில தாவர வகைகளையும் ஆராய்ச்சி செய்யவும் இச்சட்டம் அனுமதி அளிக்கின்றது. மறைமுகமாக நம்முடைய இயற்கை வளங்கள் கொள்ளை போவதற்தகு இச்சட்டம் உதவுவதோடல்லாமல் இதுபோன்ற ஆராய்ச்சியின் பயனாக விவசாயிகளுக்கு ஏற்படும் நஷ்டங்ளையும் மிகச்சிறிய இழப்பீட்டுத்தொகை மூலம் நிவர்த்தி செய்துவிடலாம் எனவும் இச்சட்டம் கூறுகிறது.




நிறைவுரை

பன்னாட்டு நிறுவனங்கள், தங்கள் நலன் காக்கும் சட்டங்களை அமல்படுத்த பலவகையான நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. உலக வங்கி மூலம் கொடுக்கும் நிர்பந்தம் ஒரு முறை; அமெரிக்கா போன்ற “அமைதியின் காவலர்கள்” மூலம் கொடுக்கும் நெருக்கடி மற்றொரு முறை; ஏழை நாடுகளின் அரசியல் தலைவர்களுக்கு லஞ்சம் கொடுத்து காரியம் சாதிப்பது மற்றொரு முறை.

இந்தோனேஷியா போன்ற நாடுகளில் சுற்றுச்சூழல் அமைச்சக அதிகாரிகளுக்கு பலவித பெயர்களில் கட்டணம் செலுத்தியதாக மான்சான்டோ நிறுவனம் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளது.

இந்தியாவில் இத்தகைய செயல்கள் நடைபெறாது என்று யாரும் உறுதிகூற முடியாது. ஆனால் சர்வதேச அரங்கில் இந்தியாவின் மாண்பு குறைந்துவிடாமல் பாதுகாப்பதற்காக பலவிதமான மனித உரிமை மீறல்கள் மறைக்கப்படுவதைப்போல இந்த லஞ்ச-ஊழல் குற்றங்களும் மூடிமறைக்கப்படலாம்.

இத்தகைய சமூக அநீதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை தீர்மானிப்பதில் சமூக பொறுப்புள்ள குடிமக்கள் யாரும் விலகி நிற்க முடியாது.





-மு. வெற்றிச்செல்வன்
(vetri@lawyer.com)
Article:
http://tamilblogs.com/a/redirect.php?pathivu=http://makkal-sattam.blogspot.com/2007/08/blog-post_04.html

0 comments: