ரசித்தவை

செந்தில்குமார் | www.senthil.co.nr |

எஸ். சையது இப்ராஹிம்

“நாடு முழுவதும் 90 ஆயிரம் ஆரம்பப் பள்ளிகளில் கரும்பலகையே இல்லை. இவற்றுள் 21 ஆயிரம் பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லை’ என்ற அதிர்ச்சியூட்டம் புள்ளிவிவரம் அண்மையில் வெளியாகியுள்ளது.
கல்வித் திட்டமிடல், நிர்வாகத்திற்கான தேசிய பல்கலைக்கழகம் என்ற அமைப்பின் உயர்குழு 35 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்களில் உள்ள 11 லட்சத்து 24 ஆயிரத்து 33 பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு இவ்வாறு அறிவித்தது.
கரும்பலகை இல்லாத பள்ளிகளை அதிகம் கொண்ட மாநிலங்களின் வரிசையில் ராஜஸ்தான் (8848), ஜார்க்கண்ட் (7645), பிகார் (5535) முன்னிலை வகிக்கின்றன.
இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகக் கருதப்படும் கிராமங்களில் 83 சதவீதம் அரசுப் பள்ளிகள். கட்டடம், கழிப்பறை, விளையாட்டுத் திடல் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் இந்தப் பள்ளிகள் தவிக்கின்றன. சுமார் 1 லட்சம் ஆரம்பப் பள்ளிகள் ஒரே ஒரு வகுப்பறையில் நடந்து வருகின்றன. பல லட்சம் பள்ளிகளுக்கு அந்த வசதியும் கிடைக்காமல், மரத்தடியில் நடைபெற்று வருகின்றன.
பண்டைய காலத்தில் இருந்து கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வரும் நாடு இந்தியா. உலகின் மிகவும் தொன்மையான நாளந்தா பல்கலைக்கழகம் இருந்தது இந்தியாவில்தான். இந்தப் பல்கலைக்கழகத்தில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் வந்து கல்வி பயின்றுச் சென்றனர். உலகப் பொதுமறை திருக்குறளில் கல்வியின் சிறப்பை வலியுறுத்தும் தனி அதிகாரமே உள்ளது.
இவற்றையெல்லாம் விட, உலகிலேயே கல்வியைத் தெய்வமாகப் போற்றும் வழக்கம் இருப்பது இந்தியர்களிடம் மட்டுமே. கலைமகள் அல்லது சரஸ்வதி வழிபாடு இதையே காட்டுகிறது.
ஆனால், சுதந்திரம் அடைந்து 60-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நேரத்தில், இந்தியப் பள்ளிகளின் அவலம் குறித்து வெளிவந்துள்ள தகவல்கள் வருத்தம் அளிக்கின்றன. இதுவரை மத்தியில் ஆட்சியில் இருந்தவர்களின் பாராமுகமே இதற்கு காரணம்.
இந்தியா போன்ற வளரும் நாடுகளில் ஒவ்வோராண்டும் ஆரம்பப் பள்ளியில் புதிதாகச் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 2006-07-ம் கல்வியாண்டில் நாடு முழுவதும் மாணவர்களின் எண்ணிக்கை ஒரு கோடி. 2007-08-ம் கல்வியாண்டில் இது ஒரு கோடியே 10 லட்சமாக உயர்ந்துள்ளது. இதற்கு ஏற்றார்போல் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
2006-07-ம் ஆண்டு தொடக்கக் கல்விக்காக பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகை ரூ. 17,133 கோடி. இது 2007-08-ம் ஆண்டில் ரூ. 23,142 கோடியாக உயர்த்தப்பட்டாலும் இந்தத் தொகை போதுமானது இல்லை.
இதன் விளைவு என்ன? பொற்றோர்கள் வேறுவழியின்றி தனியார் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இதனால் தனியார் பள்ளிகளில் கட்டணங்கள் தாறுமாறாக உயர்த்தப்பட்டுள்ளன. சில தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகளுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளை விட அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்? மத்திய பட்ஜெட்டில் மூன்றில் ஒரு பங்கு ராணுவத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆனால், கல்விக்கு சொற்பத்தொகையே ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. நாட்டின் வருங்கால சந்ததியினரைத் தீர்மானிக்கும் கல்விக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
பட்ஜெட்டில் பிற துறைகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டாலோ அல்லது புறக்கணிக்கப்பட்டாலோ கடும் ஆட்சேபம் தெரிவிக்கும் கட்சிகள் இந்தப் பிரச்னையில் தலையிட்டு, உரிய நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்த வேண்டும்.
ஒவ்வோராண்டும், மத்திய பட்ஜெட் தயாரிப்பின்போது தொழிலதிபர்கள், விவசாயிகள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள், பொருளாதார நிபுணர்களுடன் மத்திய நிதியமைச்சர் ஆலோசனை நடத்துவது வழக்கம். அதேபோல், கல்விக்கான நிதி ஒதுக்கீடு குறித்து பட்ஜெட்டுக்கு முன் கல்வியாளர்கள், மாணவர் சங்கப் பிரதிநிதிகளின் கருத்துகளையும் மத்திய நிதியமைச்சர் கேட்க வேண்டும்.
நாடு சுதந்திரம் அடைந்த போது, விவசாயம் மற்றும் தொழில்துறைகளை மேம்படுத்தும் நோக்கில் முதல் மற்றும் இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டங்கள் தீட்டப்பட்டன. அரசின் இந்த முயற்சி பெரும் வெற்றி பெற்றது. இதை உதாரணமாகக் கொண்டு, நாட்டின் கல்வி வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு கல்விக்காக ஒரு ஐந்தாண்டு திட்டத்தை மத்திய அரசு கொண்டு வரவேண்டும்.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்கீழ், கல்வி என்பது மாநில அரசின் பட்டியலில் உள்ளது. இதனால், மத்திய அரசு பொறுப்பைத் தட்டிக் கழித்து வந்தது. இதைத் தடுக்க கல்வியை மத்திய -மாநில அரசுகளின் பொதுப்பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும். இதற்காக இந்திய அரசியலைமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தம் கொண்டு வர வேண்டும். எழுத்துரிமை, பேச்சுரிமை, வாக்குரிமைப் போல் கல்வியையும் அடிப்படை உரிமையாக்க வேண்டும்.
——————————————————————————————————————-
உயர்கல்வியில் குளறுபடி!
தமிழக அரசின் உயர்கல்விக் கொள்கையில் குழப்பம் நிலவுகிறது என்பது உண்மைதான் என்றாலும், இந்த விஷயத்தில் உயர்கல்வி அமைச்சகத்தை மட்டுமே குறைகூற வழியில்லை. உயர்கல்வித் துறை பற்றிய தொலைநோக்குப் பார்வை நமது ஆட்சியாளர்களுக்கு இல்லாமல் போனதன் விளைவுதான் இந்தக் குளறுபடி.
எண்பதுகளில் அன்றைய அரசு உயர்கல்வியைத் தனியார்மயமாக்குவது என்று தீர்மானித்ததன் பயனைத்தான் இன்றைய இளைஞர் சமுதாயம் அனுபவித்து வருகிறது. அதிக அளவில் தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர்களும் பொறியியல் வல்லுநர்களும் தகவல் தொழில்நுட்பத் துறையினரும் உலக அரங்கில் செயல்படுவதற்குக் காரணமே, அன்றைய அரசு, சுயநிதிக் கல்லூரிகளைத் தொடங்க அனுமதித்ததால்தான். தனியார் பொறியியல் கல்லூரிகள் இல்லாத மாவட்டமே இல்லை என்கிற அளவுக்கு தமிழகம் முழுவதும் பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.
மாநிலத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள் 9 மட்டுமே; படிப்போர் 3662 பேர்; ஆனால், சுயநிதிக் கல்லூரிகளோ 238. கற்போரோ 70,145 பேர்.
அரசிடம் எந்த மானியமும் பெறாமல், தங்களது சொந்த முயற்சியில் இடங்களை வாங்கி, மத்திய அரசின் கீழ் இயங்கும் அமைப்புகளில் அனுமதியும் பெற்று, வங்கிகளில் கடன் வாங்கி இந்த உயர்கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. மாணவர்களிடம் நன்கொடை வசூலித்து அவர்கள் வாங்கிய கடனை அடைக்கவும் செய்கிறார்கள்.
அவரவர் முயற்சியால் ஏற்படுத்தப்படும் இந்தக் கல்வி நிறுவனங்களைக் கண்காணிக்கவோ, அவர்களது செயல்பாடுகளை நெறிமுறைப்படுத்தவோ அரசுக்கு அதிகாரம் உண்டா என்பது பரவலாக எழுப்பப்படும் கேள்வி. அது தனியார் நிறுவனமானாலும் சரி, பொதுத்துறை நிறுவனமானாலும் சரி, அதைக் கண்காணிக்கவும், அதன் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தவும் நிச்சயமாக ஓர் அரசுக்கு உரிமை மட்டுமல்ல, கடமையும் உண்டு. அப்படி இல்லாதபட்சத்தில், அந்த அரசுக்கான அவசியமே இல்லாமல் போய்விடும்.
அரசால் போதிய கல்வி நிறுவனங்களை அமைக்க முடியாத நிலையில் ஏற்படுத்தப்பட்ட இந்தத் தனியார் சுயநிதிக் கல்லூரிகளின் செயல்பாடுகளும் அவர்கள் வசூலிக்கும் கட்டணத் தொகையும் நிச்சயமாக அரசின் கண்காணிப்புக்கும் ஒப்புதலுக்கும் உட்பட்டதாக அமைந்தே தீரவேண்டும். அப்படி இல்லாமல்போனால், வசதி படைத்தவர்கள் மட்டும்தான் உயர்கல்வி பெற முடியும் என்கிற நிலைமை ஏற்பட்டுவிடும்.
அரசின் இடஒதுக்கீட்டுக் கொள்கை இந்த சுயநிதிக் கல்லூரிகளில் பின்பற்றப்படும்போது, அரசின் கட்டணக் கொள்கை மட்டும் ஏன் பின்பற்றப்படக் கூடாது? அரசு சில வரன்முறைகளை விதித்து, அனைத்துக் கல்லூரிகளின் கட்டணமும் அனைவருக்கும் ஏற்றதாக இருக்கும்படி உத்தரவிடுவதுதான் முறை. அந்த விதிமுறைகளைக் கடைப்பிடிக்க முடியாத கல்லூரி நிர்வாகத்தினரிடமிருந்து, அரசே அந்த சுயநிதிக் கல்லூரிகளை ஏற்று நடத்த முற்படுவதுதான் நியாயம்.
தனியார் நிறுவனங்களுக்கு வங்கிகளில் கிடைக்கும் நிதியுதவியும் கடனும் நிச்சயமாக அரசுக்குக் கிடைக்காதா என்ன? தகுந்த நஷ்டஈடு வழங்கி அதுபோன்ற கல்வி நிறுவனங்களை அரசு ஏற்பதை யார் தடுக்க முடியும்? இப்படியொரு சிந்தனையே அரசுக்கு ஏன் எழவில்லை என்பதுதான் புரியவில்லை.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டுக் கல்விக் கட்டணமும் இதர கட்டணங்களும் சேர்த்தே ரூ. 9 ஆயிரம்தான். தனியார் கல்லூரிகளிலோ அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கே ரூ. 3 லட்சம் வரை.
பயிற்சிக் கட்டண நிர்ணயம் என்பது இன்றியமையாதது. அதேபோல, நன்கொடை வசூலிப்பதற்கும் ஒரு காலவரம்பு விதிக்கப்பட வேண்டும். இவையெல்லாம் ஏன் ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் தெரிவதில்லை என்பதுதான் புதிர். தெரிந்தும் தெரியாததுபோல் இருத்தல், மன்னிக்கவே முடியாத குற்றம்.
இன, மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு அனைவருக்கும் கல்வி என்கிற நிலைமை ஏற்படுவது எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியமான விஷயம் ஏழை, பணக்காரன் என்கிற வித்தியாசமில்லாமல் அனைவருக்கும் கல்வியின் பயன் போய்ச் சேர வேண்டும் என்பது. பணமில்லாததால் படிக்க முடியவில்லை என்கிற நிலைமை ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பவர்களின் ஆட்சியில் நிலவுதல் கூடாது!
Article:
http://bsubra.wordpress.com/2007/08/02/education-as-basic-right/

0 comments: