senthilkumar | drpsenthil@rediffmail.com

# மோரிஷஸ் (வரிஏய்ப்பு) பாதை!

உ . ரா. வரதராசன்
மோரிஷஸ், ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள ஒரு சின்னஞ்சிறு தீவு. அதன் மக்கள்தொகை வெறும் 12 லட்சம் மட்டுமே; நிலப்பரப்பைக் கணக்கிட்டால் இந்தியாவில் நூறில் ஒரு பங்குக்கும் (ஒரு சதவிகிதத்திற்கும்) குறைவானதே. இந்த நாட்டோடு இந்தியா செய்து கொண்டுள்ள ஓர் ஒப்பந்தம் இந்திய நாட்டின் சட்டங்களைச் செல்லாக் காசாக ஆக்கிவிட்டு, வரியை ஏய்த்துக் கொள்ளை லாபம் கொழிப்பதற்கான ராஜபாட்டை ஆகி இருக்கிறது.
இந்தியா - மோரிஷஸ் நாடுகளுக்கிடையே இரட்டை வரி விதிப்புத் தவிர்ப்பு உடன்படிக்கை என்ற பெயரில் 1983-ஆம் ஆண்டில் ஒப்பந்தம் ஏற்பட்டது. இவ்வாறு ஒப்பந்தம் செய்து கொள்ளும் இரண்டு நாடுகளின் குடிமக்கள் அல்லது நிறுவனங்கள் பரஸ்பரம் வியாபாரம் மற்றும் தொழில் தொடர்புகளை மேற்கொள்கிறபோதோ அல்லது வேறு வகையில் வருமானம் ஈட்டுகிறபோதோ சொந்த நாட்டிலும் வருமான வரி கட்ட வேண்டும். வெளிநாட்டிலும் வரி கட்ட வேண்டும் என்ற நிலைமை ஏற்படுவதுண்டு. இது ஒரே வருமானத்தின் மீது இரண்டுமுறை வரி கட்டுகிற இரட்டை வரி விதிப்பாக அமைந்தது. இதைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காக, ஏதாவது ஒரு நாட்டில் வரி விதிப்புக்கு ஆட்பட்டால் மற்றொன்றில் வரிவிலக்கு அளிப்பதற்காகவே இந்த உடன்படிக்கை உருவானது.
இந்தியா இதுபோன்ற உடன்படிக்கைகளை 50-க்கும் மேற்பட்ட நாடுகளோடு செய்து கொண்டுள்ளது. ஆனால் இந்த உடன்படிக்கைகள் அனைத்தும் ஒரே விதமான சரத்துகளை உள்ளடக்கியதாக இல்லை. மோரிஷஸ் நாட்டோடு செய்யப்பட்டுள்ள உடன்படிக்கையை ஒத்த தன்மையில் குறிப்பிட்ட சில நாடுகளோடு மட்டுமே இந்தியா மேற்கொண்டுள்ளது. இந்திய - மோரிஷஸ் உடன்படிக்கை அமலில் இருந்த முதல் பத்தாண்டுகளில், பிரச்னை எதுவும் பெரிதாக எழவில்லை.
1991ஆம் ஆண்டில் தொடங்கப்பெற்ற உலகமயப் பொருளாதாரச் சீர்திருத்தங்கள், இந்த மோரிஷஸ் உடன்படிக்கைக்கு ஒரு புதிய பரிமாணத்தைத் தந்தது. 1992-ம் ஆண்டு முதல், வெளிநாட்டுப் பெரும் நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் இந்தியாவில் பங்குச்சந்தை வர்த்தகத்தில் நுழைய அனுமதிக்கப்பட்டது. அதே 1992ஆம் ஆண்டில் மோரிஷஸ் அரசாங்கமும் கடல் கடந்த வியாபார நடவடிக்கைகளுக்கான ஆணையம் (ஞச்ச்ள்ட்ர்ழ்ங் ஆன்ள்ண்ய்ங்ள்ள் அஸ்ரீற்ண்ஸ்ண்ற்ண்ங்ள் அன்ற்ட்ர்ழ்ண்ற்ஹ்) ஒன்றை நிறுவச் சட்டம் இயற்றியது. அதன் கீழ் எந்த ஒரு வெளிநாட்டுக் கம்பெனியும், மோரிஷஸில் ஒரு துணைக் கம்பெனியைப் பதிவு செய்து கொண்டு, வெளிநாடுகளில் (பங்குச்சந்தை) வர்த்தகத்தில் ஈடுபட வழிவகை செய்யப்பட்டது.
இதற்குப் பிறகுதான் மோரிஷஸ் பாதை வழியாக வெளிநாட்டு நிதி மூலதனம் வேக வேகமாக இந்தியாவிற்குள் நுழையத் தொடங்கியது. 1992 - 93இல் மோரிஷஸ் நாட்டிலிருந்து இந்தியாவிற்குள் (பங்குச் சந்தை வர்த்தகத்திற்கு) வந்த முதலீடுகள் ரூ. 17 கோடியாக இருந்தது. இதுவே 2000 - 01ஆம் ஆண்டில் ரூ. 74,050 கோடியாக உயர்ந்தது. சராசரியாக, இந்தியாவிற்குள் நுழையும் வெளிநாட்டு மூலதன வரவுகளில் மூன்றில் ஒரு பகுதி மோரிஷஸ் பாதை வழியாக வந்ததுதான் என்று மத்திய அரசின் அதிகாரபூர்வமான தகவல்கள் உணர்த்துகின்றன. 12 லட்சம் மக்கள்தொகையை மட்டுமே கொண்டுள்ள மோரிஷஸ் நாட்டில் இவ்வளவு பெருந்தொகைகள் மூலதனமாக ஆண்டுதோறும் உருவாகி வெளிநாடுகளுக்குப் படையெடுக்கும் வாய்ப்பு அறவே இல்லை; எனவே, மற்ற நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு மூலதனம் மோரிஷஸ் பாதை வழியாக அனுப்பப்படுகிறது என்பதே யதார்த்தம்!
மோரிஷஸ் பாதை மீது பன்னாட்டு மூலதனத்திற்கு ஏன் இவ்வளவு மோகம்? வெளிநாட்டுக் கம்பெனி மோரிஷஸ் நாட்டில் துணைக் கம்பெனியைப் பதிவு செய்வது மிக மிக எளிது. பன்னாட்டு பகாசூரக் கம்பெனிகள் இவ்வாறு துணைக் கம்பெனியைப் பதிவு செய்து அவற்றின் மூலம் பல்லாயிரக்கணக்கான கோடி டாலர்களை மோரிஷஸ் பாதை வழியே இந்தியாவுக்கு அனுப்புவதும், பங்குச் சந்தை வர்த்தகத்தில் லாபம் பெருக்குவதும், அந்த லாபத்தை மோரிஷஸ் வழியாகவே திருப்பி வரவழைத்துக் கொள்வதும் மிக எளிதாக நடைபெற்று வருகிறது.
இப்படிப் பெறப்படும் லாபத்திற்கு இந்திய - மோரிஷஸ் உடன்படிக்கை காரணமாக, இந்தியாவில் எந்த வரியும் மோரிஷஸ் நாடு கட்ட வேண்டிய அவசியமில்லை. எனவே, எந்த வரிச்சுமையும் இல்லாமல் வருமானம் கொழிக்கிற வழியாக மோரிஷஸ் பாதை மாறிவிட்டது.
இப்படி 600க்கும் மேற்பட்ட வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் மோரிஷஸ் கம்பெனிகளாக, இந்தியப் பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஈடுபட அனுமதிக்கப்பட்டுள்ளன. இதில் வெளிநாட்டுக் கம்பெனிகளுக்கு சற்றும் சளைக்காமல் வெளிநாடு வாழ் இந்தியர்களும், இந்தியாவில் பதிவு செய்யப்பட்டு இயங்கும் கம்பெனிகளும் மோரிஷஸ் பாதையை வரி ஏய்ப்புக்குப் பயன்படுத்தி வருகின்றன. இதன் விளைவு, மோரிஷஸ் பாதையில் வலம் வந்து பங்குச்சந்தை சூதாட்டத்தில் சம்பாதிக்கும் கொள்ளை லாபத்துக்கு இந்தியாவிலும் சரி, மோரிஷஸிலும் சரி எந்த வரியும் கிடையாது.
இந்த மோரிஷஸ் பாதையை வரி ஏய்ப்புக்காகப் பயன்படுத்திய சில உள்நாட்டுக் கம்பெனிகள் மீது இந்திய வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்து மார்ச் 29, 2000 அன்று ஆணை பிறப்பித்தது. இதன் காரணமாக வெளிநாட்டு மூலதனம் வருவது தடைபட்டு விடும்; வந்த மூலதனமும் வெளியே பறந்தோடி விடும் என்ற அச்சம் காரணமாக, அவசர அவசரமாக ஏப்ரல் 13, 2000 அன்று ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. மோரிஷஸ் அரசாங்கம் ஒரு கம்பெனிக்கு பதிவுச் சான்றிதழ் வழங்கியிருந்தாலே, அந்தக் கம்பெனியின் உரிமையாளர்களோ, அதன் மூலம் முதலீடு செய்பவர்களோ மோரிஷஸில் குடியிருப்பதாகக் கருதப்படுவார்கள்; அது தொடர்பாக எந்தவித விசாரணையோ, ஆட்சேபமோ எழுப்பக்கூடாது என்பது அந்த சுற்றறிக்கையின் கட்டளை!
இது நியாயமற்றது என்று “சுதந்திரம் காப்போம் இயக்கம்’ என்ற அமைப்பு தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. இந்த வழக்கைத் தொடுத்தவர்களில் சிவ காந்த் ஜா என்ற வருமான வரித்துறை முன்னாள் முதன்மை ஆணையரும் ஒருவர். தில்லி உயர் நீதிமன்றம் இந்த சுற்றறிக்கையை ரத்து செய்து தீர்ப்பளித்தது. “”இரட்டை வரிவிதிப்புத் தவிர்ப்பு என்பது, இரண்டு நாடுகளிலும் வரி கட்டுவதைத் தவிர்ப்பதற்காகத்தானே தவிர, எந்த நாட்டிலும் வரியைக் கட்டாமல் ஏய்ப்பதற்காக அல்ல; அதை அனுமதிக்க முடியாது” என்பது அத்தீர்ப்பின் சாரம்.
மத்திய அரசோ இந்தத் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது; “குளோபல் பிசினஸ் இன்ஸ்டிட்யூட்’ என்ற சர்வதேச முதலீட்டாளர்களின் கூட்டமைப்பு ஒன்றும் இந்த மேல்முறையீட்டில் மனுதாரராகச் சேர்ந்து வழக்காடியது. (இதன் சார்பாக வாதாடிய வழக்கறிஞர், பின்னர் மத்திய அரசின் சட்ட அமைச்சரானவர்!) உச்ச நீதிமன்றம், தில்லி உயர் நீதிமன்றத் தீர்ப்பை நிராகரித்துத் தீர்ப்பளித்தது.
மோரிஷஸ் உடன்படிக்கை வரிஏய்ப்புக்கான வசதியான பாதையாகப் பயன்படுகிறது என்பதை 2005இல் மத்திய கணக்குத் தணிக்கைத் துறைத் தலைவரின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இதற்கு முன்பாக 2001இல் கேத்தன் பாரிக் பங்குச்சந்தை ஊழலை விசாரித்த நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் அறிக்கையும் இதை வெளிச்சம் போட்டுக் காட்டியது. இந்தக் கூட்டுக்குழுவின் முன் சாட்சியமளித்த முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, “”மோரிஷஸ் பாதை தவறாகப் பயன்படுத்தப்படுவது எனக்குத் தெரியும். ஆனால் (மத்திய அரசின்) வரி வருவாயைப் பெருக்குவதை விட வெளிநாட்டு மூலதனத்தின் வரவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், மோரிஷஸ் உடன்படிக்கையின் ஓட்டைகளை அடைக்க முற்படவில்லை” என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருந்தார்.
2004-ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சிக்கு வந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு “இரட்டை வரிவிதிப்புத் தவிர்ப்பு உடன்படிக்கைகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுப்போம்’ என்று குறைந்தபட்ச பொதுத்திட்டத்தில் கூறியிருந்தது. ஆனால் குறைந்தபட்சப் பொதுத்திட்டத்தின் வாக்குறுதி “இரட்டை வரிவிதிப்புத் தவிர்ப்பு உடன்படிக்கையை மறுபரிசீலனை செய்வதற்கான உறுதிமொழியல்ல. அதை இந்தியக் கம்பெனிகள் தவறாகப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துவது மட்டுமே’ என்று நிதியமைச்சர் புதிய விளக்கமளித்தார். இது முந்தைய அரசு விட்டுச்சென்றுள்ள பிரச்னை; சர்வதேச ராஜிய உறவுகள் சம்பந்தப்பட்ட ஒன்று; தன்னிச்சையாக இந்தியா இதில் எந்த மாற்றமும் செய்ய முடியாது என்றும் அவர் கைவிரித்துவிட்டார்.
இந்தியாவைப் போலவே மோரிஷஸýடன் உடன்படிக்கை செய்துகொண்ட இன்னொரு நாடு இந்தோனேஷியா. மோரிஷஸ் நாடு தனது சட்டத்தைத் திருத்தி வெளிநாட்டவர்கள் மோரிஷிஸில் துணைக் கம்பெனிகளைப் பதிவு செய்து மற்ற நாடுகளில் வர்த்தகம் செய்ய அனுமதித்ததைக் காரணம் காட்டி 2005ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் இந்தோனேஷியா மோரிஷஸ் நாட்டுடனான உடன்படிக்கையை ஒட்டுமொத்தமாக ரத்தே செய்துவிட்டது. இந்தோனேஷியாவுக்கு சாத்தியப்படுகிற இந்த வழிமுறை இந்தியாவுக்கு மட்டும் பொருந்தாது என்பதில் எந்த நியாயமும் இல்லை.
வரி ஏய்ப்பாளர்களின் சொர்க்கபுரியாக மோரிஷஸ் பாதை தொடர்கிறது.
(கட்டுரையாளர்: தேசிய செயலர் சி.ஐ.டி.யூ.)

0 comments: